ஞாயிறு, 6 டிசம்பர், 2015


சிறுகதை


ராஜகோபாலும்.. ரெக்கார்டு பிளேயரும்...


லாசர் ஜோசப்

 
    ராஜகோபாலுக்கு  இரண்டு மூன்று நாள்களாக  அந்த வீட்டில் தான் பெயின்டிங் வேலை.    பெயின்டிங் கான்டிராக்டரான செல்வமணியோடு   வேலைக்கு அவர் செல்லத் தொடங்கி ஏறக்குறைய மூன்று வருடங்களாகி விட்டன.  உடம்பில் பெரிய வலுவொன்றுமில்லை.   கையில் ஏதோ கொஞ்சம் காசு  புரள்கிறது.  மனசும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

     அந்த வீடு  ஒற்றை வீடாக இருந்தது. அதுவும் ஒரு வித பழமைத் தன்மையுடன் இருந்தது.    முற்றத்தின் மையப் பகுதியில்  பெருத்த     ரப்பர் மரம்  ஒன்று   நின்றது.      கார் ஒரு ஷெட்டில்   பிளைன் மவுத் கார் நின்று கொண்டிருந்தது.  வீட்டின் வாசல் முன்பு  ஒரு சிறிய  மணி  தொங்கவிடப்பட்டிருந்தது,  அது அழைப்பு மணியாக இருக்கலாம். அந்த வீட்டில் சில சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்பு கூட நடந்துள்ளதாம். வீட்டுக்குச் சொந்தக்காரர்  ஒரு பெரிய ரப்பர் தோட்டத்தின் உரிமையாளராக இருப்பதாகவும் சொல்கிறார்கள். நரைந்த பிரெஞ்ச் தாடி வைத்துக் கொண்டு நெடுநெடுவென உயரமாய் இருக்கும் அவரை இப்போதெல்லாம் அதிகமாக வீட்டின் பக்கம் காண முடிகிறது.

     விசாலமான அறைகளைக் கொண்டிருந்தது அந்த வீடு.   பெயின்டிங்  வேலை   செய்யும்  ஆட்கள்  முந்தினநாளின் தொடர்ச்சியாக ஒவ்வொரு அறைகளிலும் இருக்கும் பொருள்களை எடுத்து வேறு அறைகளில் வைப்பதும், பின்னர் அந்த அறைகளை சுத்தம் செய்து பெயின்டிங் செய்வதுமாக இருந்தார்கள்.
ஒரு அறையில்   அழகும் கலையும் மிளிரும்  பொருள்கள் நிரம்பிக் கிடந்தன.  அவற்றில்,  பழமையும்.... புராதனமும் மிக்க  பொருள்கள் கூட இருந்தன.  இவையெல்லாம்   எங்கிருந்து கிடைத்திருக்கும்..  எப்படி சேகரித்திருப்பார்கள்..?  பெயின்டிங் ஆட்கள் வியப்போடு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     ராஜகோபாலின் கண்ணில்  'ராஜசெல்வி  சவுண்ட்ஸ்' என எழுதப்பட்டிருந்த அந்த ரெக்கார்டு பிளேயர்  பட்டது. இது என்னுடையதல்லவா..!  என் இசைத் தட்டுகள் இதில் அல்லவா ஓடியது...!' அவர் மனம் படபடத்தது. 
"ஓய்... இது எனக்கிட்ட இருந்ததாக்கும் ... தெரியுமா...." என்றார் அருகில் நின்ற சக பெயின்டரின் தோளைப் பிடித்தவாறு.
"அப்பிடியா...!" என்றான் அவன்
"ஆமா... நான் சவுண்ட்ஸ் சர்வீஸ் வச்சிருந்தப்ப  முதல்ல வாங்கின பிளேயர் இது தான்..."
"இது  எப்பிடி இங்க வந்தது...?" அவன் திருப்பிக்  கேட்டான். 
ராஜகோபால் சிறிது நேரம் மௌனமாக நின்றார்.  பின்னர் இடது கையால் முகத்தைத்  தடவிக் கொண்டே  "எல்லாம் எனக்க நேரம்...."  என்றார்.  குரல் தளர்ந்திருந்தது.
அந்த இடத்தில் ஒரு வித இறுக்கம் சூழ்ந்து கொண்டது.
சிறிது நேரத்திற்குப் பின்,
"இப்ப... இத நான்  கேட்டா  எனக்குத்  தருவினுமா...?"  அவனிடம் கேட்டார்.
"ஏன்.. அப்பிடி..?"
"இது எனக்க  வாழ்வோட கலந்தாக்கும்.. இதில தான் எனக்க மனசு சுற்றிக் கிடந்தது. இப்ப இது எனக்க கையில் இருக்காதாண்ணு தோணுது... அதனால தான்.... கேட்டா தருவினுமாண்ணு...."
"இது  வலிய  எடமில்லியா.. ?  இருந்தாலும் கேட்டுப்பாரும்..." என்றான் அவன்.  
ராஜகோபால் அந்த ரெக்கார்ட்  பிளேயரை கையில்  எடுத்து வைத்துப்  பார்த்துக் கொண்டே நின்றார்.
அவரது மன ரெக்கார்டு பிளேயரில்  நினைவுகள் என்னும் இசைத்தட்டு   பின் நோக்கிச் சுழலத் தொடங்கியது.

    கல்லியாண வீடுகளில்  ரெக்கார்டு பிளேயர்களில் இசைத்தட்டு சுழல்வதை வேடிக்கைப்  பார்த்துக் கொண்டே  நிற்பான்   ராஜகோபால்.  அவனுக்கு  பரவசம் தாங்காது.  தானும்  இது போல ரெக்கார்டு பிளேயர் வாங்கி வைத்து தொழில் செய்ய வேண்டுமென்று நினைப்பான்.  பவுலோஸ் சார்   தான் அப்போது  குலசேகரத்தில்  சவுண்ட் சர்வீஸ்  தொழில் செய்து வந்தார். அவர் சில காலம் மலேசியாவில்   இருந்தவர்.  ராஜகோபால்,  பவுலோஸ் சார்  பின்னாலேயே போவான்.  அவனுக்கு அப்போது பதினெட்டோ பத்தொன்பதோ வயது இருக்கும். கொஞ்சம் நாளில் பவுலோஸ் சார்  இவனை உதவிக்கு    வைத்துக் கொண்டார்.  குறுகிய காலத்தில் இவன்   தொழில் கற்று விட்டான்.  ஒருநாள்,
"இந்தத் தொழிலை விட்டிடுலாமிண்ணு நெனக்கியேன்...
நீ இதை எடுத்து நடத்தியாடே...?" என  பவுலோஸ் சாரே   இவனிடம் கேட்டார். இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.  "உவா.. எடுக்கிலாம்..." என்று உடனே பதில் சொன்னான். தனது தகப்பனிடம் தகராறு  செய்து  ஆரணிவிளையில்   குடும்பச் சொத்தில் நல்ல காவலம்  உள்ள இரண்டு  மூடு புளியமரங்கள் உள்பட ஐந்து சென்று நிலத்தை விற்று  சவுண்ட் செட்டை  வாங்கினான்.  அந்த  ரெக்கார்டு பிளேயர் விஷேசமானது.  சிறிய  சூட்கேஸ் வடிவில் இருந்த அந்த ரெக்கார்டு பிளேயர் சுவிட்சர்லாந்தின் 'லென்கோ' கம்பெனியின் தயாரிப்பு. அதில்  'மேட் இன் சுவிட்சர்லாந்து'  என்று எழுதப்பட்டிருந்தது. அதனை வாங்கிக் கொண்டதில் ராஜகோபால் அதிகமாகப் பெருமைப் பட்டுக்  கொண்டான்.  கொஞ்சம்  நாள்களிலேயே  சவுண்ட் சர்வீஸ் தொழிலில் பிரபலமாகிவிட்டான்.    கல்லியாண வீடா..... பூப்புனித நீராட்டு  வீடா...   கூப்புடு ராஜகோபாலை  என்பார்கள்  ஊரில்.  இவனும் விறுவிறுப்பாக ரேடியோ செட் கட்டுவான்.

      கல்லியாணம்,  பூப்புனித நீராட்டு விழா வீடுகள்... அது தான்,  அவசர  வீடுகள், உறவுகள் சங்கமித்துக்  கிடக்கும் இடங்கள்.    வீட்டை வெள்ளை அடித்தல்,  முற்றத்தில்  பந்தல் போடுதல், அலங்காரத்திற்காக  குலை வாழை, சளை ஓலை, உலத்திப்  பூக்கள் கட்டுதல்... ரேடியோ செட் கட்டுதல்..  என  உறவுகளும், சுற்றமும்  ஓடியாடி உழைக்கும்.  சவுண்ட் சர்வீஸ்காரன் பிளஷர் காரில்  சாதனங்களைக் கொண்டு வந்தவுடனேயே   பரபரப்பு தொற்றிக் கொள்ளும். வீடுகள் தடத்திலயோ, பொற்றைக் கட்டுகளிலயோ... எங்கே இருந்தாலும் காரில் இருந்து சாதனங்களை இறக்கி சுமந்து செல்வதற்கு ஆட்கள் நான் மு்ந்தி... நீ முந்தி... என்று வருவார்கள். ஓலைக் கூரைகளோ.. ஓட்டுக் கூரைகளோ.. எந்த கூரை வீடுகளாக இருந்தாலும்  வீடுகளின்  முன் பக்கம் திறந்த நிலையிலிருக்கும் வராந்தாக்களில்   சவுண்ட்ஸ் சர்வீஸ்  காரருக்கு இடம் கிடைத்து விடும்.  வராந்தா இல்லாத வீடுகளில் தனியாக 'பெரை' கட்டிக்  கொடுக்கப்படும்.  பல வீடுகள்  அவசர நிகழ்ச்சிகளின் போது தான் மின் விளக்கு வெளிச்சத்தைக்  காணும். தூரத்தில் எங்காவது மின் இணைப்பு இருக்கும் வீட்டிலிருந்து ஒயர் இழுத்து வரப்படும். ரேடியோ செட்டின் பெயரில் வீடும் வெளிச்சம் பெறும். அதற்கும்  வாய்ப்பு இல்லாத வீடுகள் ஆயில் மிஷின் உபயத்தில் பாட்டும், வெளிச்சமும் பெறும். ராஜகோபால் தக்கலையிலோ.... தொடுவெட்டியிலயோ இருந்து  வாடகைக்கு ஆயில் மிஷின் எடுத்து வருவான். கூம்பு ஒலி பெருக்கிகளை புளியமரத்திலயோ,  தென்னை மரத்திலயோ கட்ட வேண்டும். அப்போது தான் பல மைல் தூரத்திற்கு பாட்டுச் சத்தம்  கேட்கும்.  அவசர வீடுகளை அக்கம்பக்கத்தவர்களுக்கு அடையாளம் காட்டுவேதே பாட்டுச் சத்தமாகத் தான் இருக்கும்.  தூரத்துச் சொந்தங்களும் பாட்டுச் சத்தம் கேட்கும்  இடத்தை வைத்துக் கொண்டு வந்து சேர்ந்து விடுவர். மரங்களில் ஏறி கூம்பு ஒலி பெருக்கிளைக் கட்டித் தருவதற்கும் ஆட்களுக்கு பஞ்சம் இருக்காது.

    'அன்னக்கிளி' படம் வந்திருந்த காலகட்டம் அது.  'மச்சானப் பாத்தீங்களா....'  பாட்டு ஒலிக்காத கல்லியாண வீடுகளே இல்லை. ராஜகோபாலிடம் மூன்றோ.. நான்கோ..  அன்னக்கிளி இசைத்தட்டுகள்  இருந்தன. 'அன்னக்கிளியே உன்னைத் தேடுதே... மச்சானப் பாத்தீங்களா... ' என பாடல்களைப்  போட்டுத் தாக்குவான் இவன்.   இளம் தலைமுறை  அப்படியே மெய் மறந்து நிற்கும்.  ராத்திரியானா  கதைவசனம்  போட்டாக  வேண்டும். பராசக்தி, மனோகரா, வீரப்பாண்டிய கட்டப் பொம்மன்.. இப்படி ஏதாவது ஒரு கதை வசனத்தை  ஓட விடுவான். கதை வசனத்தின் லயிப்பில் கறிக்காய் வெட்டுதல், தேங்காய் துருவுதல் நடக்கும். கூடவே  ஊரும் மயங்கிக் கிடக்கும்.  ரேடியோ செட் காரனுக்கு கல்லியாண  வீடுகளில்  ஆர்டர் உள்ள ஒவ்வொரு ராத்திரியும்  சிவராத்திரி தான்.

     கல்லியாண வீடுகளில் மாப்பிள்ளையை விட பல நேரங்களில் ரேடியோ செட் காரனுக்குத் தான் மவுசு.  எப்போதும் ரேடியோ செட் காரனை சுற்றி  பொடிகள், இளவட்டங்கள் என ஒரு கூட்டம்  அலையும். தாவணிக் குமரிகள் கூட அப்படித்தான்.  அதிலும்  இளமையா... இன்னும் கல்லியாணம் ஆகாம  இருக்கும் ராஜகோபாலைச்  சுற்றி தாவணிக் குமரிகள்...   வளைய...வளைய. வந்தவாறே ... 'அந்தப் பாட்டப்  போடுமா.. இந்தப் பாட்டப் போடுமா..' என்பார்கள். நக்கலுக்கும், கேலிக்கும் பஞ்சமிருக்காது.  மணப்பெண்கள்  கூட தங்களுக்குப் பிடித்தப் பாடலை  துண்டுத் தாளில்   எழுதி சிறிசுகளிடம்  கொடுத்து விடுவார்கள்.  அதுகளும் 'அக்கா இந்தப் பாட்டைப் போடச் செல்லிச்சி...' என்று வந்து நிற்பார்கள். ராஜகோபாலுக்கு பெருமையாக இருக்கும். அந்த நேரங்களில்  சட்டைக் காலரை  தூக்கி வைத்துக் கொள்வான். ஆனால் அவனது ரெக்கார்டு பிளேயரில் அல்லது இசைத்தட்டுகளில் யாராவது கைவைத்து விட்டால்  பாம்பு போல் சீறிவிடுவான்.   எதுவாக இருந்தாலும்  அவனிடம்  கேட்டுவிட்டு தான் செய்ய வேண்டும்.

      அன்றும் அப்படித்தான்... தும்பகோடு கொச்சுமணி வீட்டில் அவரசம். அவரது மகளுக்கு கல்லியாணம்.  ராஜகோபால் பாட்டைப் போட்டு விட்டு  வெளியே எங்கோ போயிருந்தான்.  'கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ...' பாடல்  ஒலித்து முடிந்து இசைத்தட்டு காலியாக ஓடிக் கொண்டிருந்தது.  அப்போது அங்கு வந்த மணப்பெண்ணின் தோழி  செல்வி ரெக்கார்ட்டு பிளேயரின் ஊசியை தூக்கி விட்டு இசைத்தட்டைத் திருப்பிப் போட்டு விட்டாள், 'அது மாஞ்சோலை கிளி தானோ.. மான் தானோ...' எனப்  பாடத் தொடங்கியது. இதனை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்த ராஜகோபால் விறைப்பாக வந்துவிட்டான். "யாரு... ரெக்கார்டை மறிச்சிப்  போட்டது... ஒங்களுக்க இஷ்டம்  போல போடியதுக்கா வைச்சிருக்கு..."  என்றான் குரலை உயர்த்தியவாறு.
செல்விக்கு அழுகை வந்து விட்டது.
அவள் திருமணப் பந்தலின்,  ஒரு ஒரம் சென்று தூணைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.. அவளது தோழிகள் அவளை சமாதானப்படுத்த முயன்றனர்.
செல்வியின் அழுகை நிற்கவில்லை.
"லே...தம்பி... அது கரஞ்சிக்கிட்டே இருக்கு...பெய் வல்லதும்  செல்லி சமாதானப்படுத்து..." என்றார்,  அவன் அருகில் வந்த பெண் ஒருத்தி.
ராஜகோபாலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு  ஒருமாதிரி ஆகிவிட்டது.
நேராக அவள் அருகில் சென்று "போட்டு" என்றான். 
அவள் அழுகையை நிறுத்தினாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்புறம்  முகத்தைத் உயர்த்தி  இவனை ஒரு பார்வை.  இவனும் அப்போது தான் அவளது முகத்தைப் பார்த்தான். இவனுக்குள் ஏதோ நிகழ்ந்து போலிருந்தது.  அவள் அங்கிருந்து ஓடி  மறைந்தாள்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் மனதில் மாஞ்சோலைக் கிளிதானோ... மான் தானோ... வேப்பங்காட்டுக் கிளியும் நீ தானோ என்ற பாடல் தான் ஓடிக் கொண்டேயிருந்தது.   'இசைத் தட்டை அல்ல...  எனக்க  மனசையில்லியா மறிச்சிப் போட்டுட்டா'   என்ற எண்ணம் அவனுக்குள் வந்தது.  தொடர்ந்து வந்த கல்லியாண  வீடுகளில் மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ... பாடல் இடம்  பெற்ற  கிழக்கே போகும் ரயில் படத்தின்  இசைத்தட்டையே அதிகம் போட்டான்.  அவனது  மன ரெக்கார்டு பிளேயரில் அவள் ஒரு இசைத் தட்டாகவே சுழன்றாள்.   

    அவனிடம் ஒரு 'எஸ்டீ' பைக் இருந்தது. அதனை எடுத்துக் கொண்டு செல்வியின் வீடு இருக்கும் சூரியகோடு  பக்கமாக அடிக்கடி போய் வரத் தொடங்கினான். ஒரு முறை வீட்டு வாசலில் வைத்து  இவனைப் பார்த்த செல்வி, ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு நின்றாள்.  இவனுக்குள் ஆயிரம்  பல்புகள் ஒரே நேரத்தில் எரிந்தது போன்ற வெளிச்சம். அதற்குப் பிறகு இவனது  எஸ்டீ பைக் அடிக்கடி அந்த வழியாகச் செல்லத் தொடங்கியது.  இவனது  பைக்கின்  குடு...குடு... சப்தம் கேட்ட போதெல்லாம் அவள் வீட்டிலிருந்து ஓடி வெளியே வந்து இவனுக்கு தரிசனம் தர தவறவில்லை.
ஒரு முறை இவன்  பைக்கில் சென்ற  போது அவள் ஊற்றுக்குழியில் இருந்து குடத்தில்  தண்ணீர் எடுத்துக் கொண்டு  எதிரில் வந்தாள்.
இவன் அவளது அருகில் பைக்கை  நிறுத்தி காலை தரையில் ஊன்றினான். இவனைப் பார்த்தபோது  அவளுக்கு  பதட்டமாக இருந்தது.  கண்கள் படபடத்தன.  இடையில் இருந்த குடத்தின் எடை அதிகரித்தது போலிருந்தது.  நின்று விட்டாள். 
"பிடிச்சிருக்கா என்ன..." இவன் கேட்டான்.
"ம்..."
"வீட்டுல சம்மந்தம் கேக்கட்டா..."  இவனது நேரடியான கேள்வியில் ஒரு கணம் பதறி விட்டாள்... பின்னர்
"ம்..." என மெதுவாக தலையசைத்து நடக்கத் தொடங்கினாள்
இவன் மீண்டும் ஏதே பேச நினைத்து அவளை மறித்தான்,
அவள் தண்ணீர்  நிறைந்திருந்த குடத்தில் விரல்களை விட்டு இவன் முகத்தில் தண்ணீரைச் சிதறடித்து நடந்து போனாள்.   அவளது கண்களில் நிறைய காதல் இருந்தது.  

     செல்வி அவனது வாழ்விற்குள் வந்து விட்டாள்.  அதன்பின் தான் அவன் தனது சவுண்ட் சர்வீசுக்கு 'ராஜ செல்வி  சவுண்ட்ஸ்' என்று பெயரிட்டான். அதில் தன் பெயரும், தனது மனைவியின் பெயரும் இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்வான்.  அவன் தொழில் தொடங்கும் போது பவுலோஸ் சாரிடமிருந்து    வாங்கிய  அந்த ரெக்கார்ட் பிளேயரின் மேல் மூடியி்ல்  ராஜ செல்வி  சவுண்ட்ஸ் என எழுதினான்.  அந்த ரெக்கார்டு பிளேயரை பின்னர் அவன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். செல்வி அதனை அடிக்கடி எடுத்து துடைத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்வாள். அதில் அவளுக்கான ரகசிய  இசைத்தட்டுகள் சுழல்வதாகவும், அவளது உயிரின் ராகங்கள் ஒலிப்பதாகவும் நினைத்துக் கொள்வாள். 

     தொழில் விரிவடைந்தது. கூடுதல் ரெக்கார்ட் பிளேயர்கள், ஆம்பிளிபயர்கள், கூம்பு ஒலி பெருக்கிகள், மைக் செட்டுகள் அவன் தொழிலுக்குள் வந்தன.   ஒரு நல்ல இசைப்  பாடல் போலவே தொழில் பிரபலமானது.  இசைத் தட்டுகள் நிற்காமல் சுழன்றன.

    குலசேகரத்திற்கு  மட்டுமல்ல அருகிலுள்ள  திருவரம்பு, மங்கலம், பொன்மனை, சூரிய கோடு, திருநந்திக்கரை, திற்பரப்பு, பேச்சிப்பாறை,  என எங்கும் ரேடியோ செட் கட்டினான். தேர்தல் பிரச்சார காலங்கள் என்றால் அவனுக்கு உற்சாகம் தான்.   பிளஷர் காரின் மேல்பகுதி  இரும்புக்  கேரியரில் முன்னும் பின்னுமாக இரண்டு கூம்பு ஒலிப் பெருக்கிகளை கட்டி வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம்  போவான். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரத்திற்கு அழைத்தால் மறுக்கமாட்டான். அந்தக்கட்சிக் காரர்கள்  பணம் பாக்கி வைத்திருந்தாலும் பரவாயில்லை அவனுக்கு.  மீண்டும் அழைத்தாலும் போவான்.  காடு, மேடு, மூலை, முடுக்கு, தோட்டம்  என பிரச்சார பிளஷர் கார்  போகும்.  காரிலிருந்து வீசி ஏறியப்படும் நோட்டீசுகளை பொறுக்கி எடுக்க சிறுசுகள் பின்னால் ஓடிவருவார்கள்.  பிரச்சார இடைவேளைகளில்  "சகாக்களே மும்போட்டு...., விப்ளவம் ஜெயிக்கட்டே.., மரிக்கான் ஞங்கக்கு மனசில்லா..., செங்கொடி ஜெயிக்கட்டே..."  என   பாடல்களைப் போடுவான். அந்தப் பாடல்களைக்  திரும்பத் திரும்ப கேட்டுக் கேட்டே  அவனுக்கு அவை மனப்பாடம் ஆகிப்போயின.  அவனுக்கு அது பெருமையாக இருந்தது.

    ஊர்களில் நடக்கும்    'சைக்கிள் சவுட்டு' நிகழ்ச்சிக்கு  ரேடியோ செட் கட்டுவதென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். ஒரு வார காலம் நடக்கும் சைக்கிள் சவுட்டு  நிகழ்ச்சிகளில்,  ரெக்கார்டு டான்ஸூம், காமெடி நாடகங்களும்,  மேஜிக்குகளும், மயி்ர் கூசும் சாகசங்களும்,  சைக்கிளில் களத்தை சுற்றி வரும் சைக்கிள் சவுட்டு கலைஞனின் வித்தைகளும் மக்களின்  மாலைப் பொழுதுகளை  இனிப்பாக்கும்.. களத்தின் நடுவில்  மூங்கில் கம்பு நடப்பட்டு அதில் இரு ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டிருக்கும்.   நாங்க... புதுசா...கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க....போன்ற அதிரடியான பாடல்களைப் இவன் போட்டுக் கொடுப்பான். ஆட்டம் தூள் பறத்தும். கேரள  திருநங்கைகள்  வேஷம் கட்டி ஆடும் போது விசில் சத்தம் பலமாய் எழும்.  உடைந்த குப்பித் துண்டுகளின் மீது புரண்ட படி டியூப் லைட்டுகளை சாகசக் கலைஞன் நொறுக்கும் காட்சிகளில் பார்வையாளர்களின் மனங்கள்  வலிக்கும்....கண்கள் கசியும். ராஜகோபால்  ஒரு குணச்சித்திர  நடிகனைப்  போல  அங்கே  சுற்றித் திரிவான். சில நேரங்களில்  மைக்கை கையில் எடுத்துக் கொண்டு அலோ... ஒண்ணரை கிலோ... என்பது போன்ற அறுவைகளையும்  அவிழ்த்து விடுவான்.

 அந்த சமயத்தில் தான் ரப்பர் மரம் மலைகளிலிருந்து வேகமாக ஊர்ப்பகுதிகள் நோக்கி  இறங்கி வந்தது. அது பெருவெள்ளத்தைப் போல தென்னையையும், புளியையும், மாவையும், கொல்லாவையும், பலாவையும், மர வள்ளியையும்,  வாழையையும், நெல்லையும்  வாரிச் சுருட்டி அழித்தது. பின்னர் அந்த  இடங்களில் தன்னை நிறுத்திக் கொண்டது.  மக்களும் அதனை  கட்டித் தழுவி வரவேற்றனர்.  அது  அதிகமாய்.... அதிகமாய்.... ரப்பர் பால் கொடுத்தது. ஊர்களில்  ஓலைக் கூரைகள், ஓட்டுக் கூரை வீடுகள் சரிந்து விழுந்து, மட்டுப்பாவு வீடுகளாய் எழத்தொடங்கின.  கூடவே மூலைக்கு மூலை திருமண மண்டபங்களும்  முளைத்தன. திருமணங்கள் வீடுகளிலிருந்து  திருமண மண்டபங்கள் நோக்கி நகர்ந்தன.  இந்த ரப்பரு  உள்ளவனுவ பவுறு கொண்டில்லியா அலையானுவ.'  அவன் நினைத்துக் கொள்வான்.  பொங்கிப் பெருகும் ரப்பர் பாலில் தனது தொழில் மூழ்கிவிடுமோ என்று கூட அஞ்சினான். ஆனால் உடனடியாக அப்படி  எதுவும் பெரிதாய் நடந்துவிடவில்லை. கோயில் விழாக்களும், பெந்தேகொஸ்தே கன்வென்ஷன்களும் கை கொடுத்தன.

     ஒருநாள் காலையில் 'தினமலரை' பார்த்துக் கொண்டிருந்த அவன் அதிர்ந்து விட்டான். 'குமரி மாவட்டத்தில் கூம்பு ஒலி பெருக்கிகளுக்குத் தடை. மண்டைக்காட்டு கலவரத்திற்குப் பின் அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் பரிந்துரை...' என்றெல்லாம் அதில் எழுதப்பட்டிருந்தது. 
 "மதம் பிடிச்ச பயலுவளால ஆருக்கெல்லாம் கஷ்டம்... நமக்க தொழில்ல இல்லியா மண்ணு வந்து விழுது...." என புலம்பினான். அப்போது இவனிடம் இருபதுக்கும் அதிகமான கூம்பு ஒலி பெருக்கிகள் இருந்தன.  கேரளத்தில் இருந்தும் வேற எங்கேயோ இருந்தும் வந்தவர்களுக்கு  அவற்றை சும்மா   கொடுத்தது போல் வாரிக்கொடுத்தான்.  அப்புறம் தான் பெட்டி ஒலி பெருக்கி வாங்கத் தொடங்கினான். "இந்த பெட்டி ஸ்பீக்கர்களின்  சத்தம்  செவியில இல்லியா வந்து அடிச்சுது.."  என ரொம்ப நாட்கள் புலம்பித்  திரிந்தான்.
  
   'லே.. ராஜகோபாலு.. வித்தியாசமா யோசிக்கணும்பிலே.... புதுசு...புதுசா  கண்டுபிடிக்கணும்பில...' என்று அவன் உள் மனம் அடிக்கடி சொல்லும்... அப்படித்தான் அவன் சீரியல் பல்புகளில் வித்தைகள் காட்டத் தொடங்கினான்.   விழாக்களில் அவன் சீரியல் பல்புகள் கட்டினானென்றால்  மொத்த ஊர் ஜனமும் திரண்டு நின்று வேடிக்கைப் பார்க்கும். முட்டையிடும் கோழி, பந்தடிக்கும் யானை, தண்ணீர் குடிக்கும் காகம், சிறுநீர் கழிக்கும்   நாய்... என சீரியல் பல்புகளில் வித்தைக்  காட்டுவான். அதற்காக  அவன் மர உருளையில் செய்த ஒரு கருவி வைத்திருந்தான்.   ஒரு மரப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த அது  சுழலும் போது  சீரியல் பல்புகள் வித்தைக் காட்டும்.  அந்தக் கருவிக்கு   'கட்டவுட்டர்' என்று ஏதோ ஒரு  பெயர் சொல்லுவான். அது  சுழலும் போது  தீப்பொறிகள் வந்த வண்ணம் இருக்கும்  அதனைப் பார்க்க சின்னப்பையன்களின்  கூட்டம்  முண்டியடித்து நிற்கும்.

    ஒரு முறை ஆரணி திடலில்  மே தின பொதுக் கூட்டத்தில் அவன் குரங்கிலிருந்து மனிதன் வந்த பரிணாமக் கோட்பாட்டை சீரியல் பல்பில் காட்டினான்.  அந்த விழாவிற்கு  வந்திருந்த  கேரள மாநில கம்யூனிஸ்ட் தலைவருக்கு அதனைப் பார்த்தபோது  ஆச்சரியம் தாங்கவில்லை. விழா மேடையில் இவனை வரவழைத்து  கட்டிப்பிடித்து  துண்டு அணிவித்துப் பாராட்டினார். இவன் அதை வாழ்நாள் பாக்கியமாகக் கருதிக் கொண்டான். அப்போது எடுத்துக் கொண்ட போட்டோவைக் கூட ரொம்ம நாள் வீட்டின் முன்னறையில்  மாட்டி வைத்திருந்தான்.

    இன்னொருமுறை  கடையாலுமூடு ஆலயத்தில்  கிறிஸ்துமஸ் விழாவில்,   மூன்று ஞானிகளுக்கு   வால்  நட்சத்திரம்  வழி சொல்லி இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தைக் காட்டிக் கொடுப்பதை சீரியல் பல்பில் அமர்க்களப்படுத்தியிருந்தான். ஆலய பாதிரியார் இவனை கட்டி அணைத்து  அரைப் பவுன் தங்கமோதிரம் அணிவித்து  பாராட்டியபோது இவனுக்கு அழுகையே வந்து விட்டது.

      ஒருகட்டத்தில்  தொழிலில்  போட்டி வந்து விட்டது.  இவனது சிஷ்யர்கள் உள்பட பலர்    புதிய தொழில் நுட்பங்களுடன் தொழிலுக்குள் வந்து விட்டனர்.  அப்போது இவனும்  தொழில் நுட்பத்தைப் பிடித்துக் கொண்டான்.  ஹவா...ஹவா.. ஏ... ஹவா...,   ரஹ்மானின் முக்காலா... முக்காபுலா...  என எந்தப் பாடல்கள் வந்த போதும் அந்தப் பாடல்கள் உச்சக்குரலில் ஒலிக்கும் வகையிலான நவீன தொழில் நுட்ப  ஒலி பெருக்கிகள் வைத்தான். அரங்கங்களை  ஒளிவெள்ளத்தில் மிதக்க வைக்கும் வண்ண விளக்குகள் வைத்துக் கொண்டான்.  புதிய ஜெனரேட்டர்கள்,  சவுண்ட் மிக்சர்கள் வைத்துக் கொண்டான்.  அதேவேளையில் மறுபுறம்  வருமானத்தின் பெரும்பகுதியை முதலீடு தின்னத் தொடங்கியது. வருமானம் குறையத் தொடங்கியது.

     இந்தத் தொழில் நுட்பம் தான் எத்தனை எளிதானது...?  ஆனால் தொழில் நுட்பம் இன்று இருப்பதை நாளை குப்பையாக்கி  ஆக்கிவிடுகிறதே...? என் பாட்டன் பயன்படுத்தியது என்று இங்கே எதையும் வைத்துக் கொண்டு காலம் கடத்தி விட முடியுமா...?  தொழில் நுட்பம் தான் தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் தொழில் நுட்பம் எல்லாவற்றையும் மலிவாகவா  தருகிறது....? சவுண்ட் சர்வீஸ் தொழிலில் தான் எத்தனை புதுப்புது தொழில் நுட்பங்கள்...? நேற்று இருந்தது இன்று பயன்பாட்டில் இல்லையே..? அதற்கான கூடுதல் முதலீட்டிற்கு எங்கே போவது...? ராஜகோபால் பல நேரங்களில் இப்படி யோசித்துக் கொண்டான்.

    ஒன்று இரண்டு முறை அல்ல, பல முறை ஊரில் சக ரேடியோ செட் காரர்களை அழைத்துப் பேசினான்.  "லேய்....  இப்பிடி போட்டி போட்டு தொகையை கொறைச்சி ஆடர் எடுத்து செட் அடிச்சியதால யாருக்கு என்ன லாபம்... ?   வெறும் கையோட தானே வீட்டுக்குப் போகவேண்டியிருக்கு...  ஒரு ரேட்டை முடிவு செஞ்சி செட் அடிப்போம்ல எல்லாருக்கும் வருமானம் கிட்டும்.." என்று சொல்லுவான்..." ஆனால்,  அது அந்த நேரத்திற்கான பேச்சாகவே  காற்றில் கரைந்துப் போகும். நடைமுறைக்கு வருவதில்லை. 

    காலத்தின் ஓட்டம் வேகமாக இருந்தது.  போல் இருந்தது.   ராஜகோபாலுக்கு வயது ஏறிவிட்டது.  தொழில் நுட்பம் அதனோடு இணைந்து  பயணிக்க கட்டாயப்படுத்தியது.  இல்லையெனில் அது குப்புறத் தள்ளிவிடும்  போலிருந்தது. மறுபுறம்   தொழில் போட்டி பாடாய்ப் படுத்தியது. முன்பு போல் தொழிலில் போட்டி போட முடியவில்லை. ஆர்டர்கள் குறைந்து விட்டன. அதுவும் குறைந்த தொகையில் வரும் ஆர்டர்கள். வருவாயை சம்பளமும், பராமரிப்புச் செலவுகளும் தின்றன.  தடுமாறினான்... நன்றாகவே தடுமாறினான்.  'ஒரு இசைத் தட்டைப் போலவோ, ஒரு ஒலி நாடாவைப் போலவோ காலம் என்னையும் குப்பைக் கூடையில் வீசிவிடுமா..?'  கலங்கினான்.

   அன்று  ஊர்க்கோயிலில்   பத்து  நாள்  திருவிழாவிற்கு ரேடியோ செட் கட்ட கொட்டேஷன் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தான். அது அவன் வருடக்கணக்கில் ரேடியோ செட் கட்டும் கோயில்.  குறைந்த கொட்டேஷன் தொகைதான் எழுதியிருந்தான். கொட்டேஷன்கள் பிரிக்கப்பட்ட போது, கவிழ்ந்து விட்டான். ஆமாம்... அவனை விட குறைவான தொகைக்கு கொட்டேஷன் கேட்டவருக்கு ஆர்டர் போய்விட்டது. மின்சாரம் தாக்கி ஏறியப்பட்டவனைப்   போல் உணர்ந்தான். கோபமும்... ஆத்திரமும் வந்தது.  கோயில் நிர்வாகியிடம்  வாக்கு வாதம் செய்தபோது,  பிடித்து அப்புறப்படுத்தப்பட்டான்.

   ஒருநாள்  காலை.  சூரியன்  மிதமான வெக்கையை  இறைத்துக் கொண்டிருந்தது.    ராஜகோபால் வீட்டின் முன், வராந்தாவில் வெற்றுடம்பில் வேட்டியை  கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். கூடத்திலிருந்த  டிவியிலிருந்து   'இரும்பிலே ஒரு இருதயம்  முளைக்குதோ...' பாடல்  வெளியே வரை கேட்டுக் கொண்டிருந்தது.  'தொழில் நுட்பம்  மனுஷ இதயங்களைக் கூட இரும்பில செஞ்சி விடும் போலிருக்கு.'    பாடலைக்   கேட்டு சலித்துக் கொண்டான்.

"நமக்கு  கல்லியாண வயசில்  ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கு தெரியுமில்லியா.. தொழில்ல இப்படி நஷ்டமும், வேதனையும் அடஞ்சா  அதுகள எப்பிடி கரை சேக்கியது... "  அவன் அருகில் வந்து அமர்ந்த  செல்வி கேட்டாள்.
"அதுதான் நானும் யோசிக்கியேன்..."
"இருக்கிய சாதனங்கள விற்று கடனையும் அடச்சி... பிள்ளைகளுக்க கல்யாணத்துக்கான  வழியயும் பாக்கியது இல்லியா... நல்லது..."
"அப்படித்தான் இல்லியா... அவளது பேச்சை ஆமோதிப்பது போல் பதில் சொன்னான்.
"ஆமா..." அவள் முகத்தில் ஒரு வித நிறைவு தெரிந்தது.
"அதுக்கப்பெறவு என்ன தொழில் செய்யியது..." அவன், அவளிடம் கேட்டான்.
"வேற எதாவது புதிய தொழில்  செய்யமுடியாதா..."
" இனி இந்த வயசில புதுசா  என்ன தொழில் செய்யியது..."
"............."
அதற்குப் என்ன பதில் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்திருக்க வில்லை.

    பின்னொரு நாள்,  ராஜகோபால் ராஜ செல்வி  சவுண்ட் சர்வீசை நிறுத்தினான்.  சாதனங்கள் அனைத்தையும் விற்றான். அவனிடம் தொழிலின் அடையாளமாய்  இருந்தது,  முதலில் வாங்கிய   அந்த ரெக்கார்டு பியேளர் மட்டும் தான்.
ஒரு நாள், தனது மூத்த மகள்  "அப்பா நான்  இந்த ரெக்கார்டு பிளேயரையும்  மாப்பிள  வீட்டுக்கு போகும் போது கொண்டுப் போகட்டா..." என்று கேட்டப் போது "இது எப்பளும் நம்ம வீட்டுல தான் இருக்கணும்.." என்று கூறி அவளது ஆசையைத் தடுத்து விட்டான்.
ஊருக்கெல்லாம்... பாட்டு கட்டிய  அவனுக்கு, அவனது மகள்களின் திருமணத்திற்கு கொண்டாட்டமாய் பாட்டுப் போட  முடியவில்லை.

     நாள்கள் வேகமாய் நகர்ந்தன. மகள்களைத் திருமணம் செய்து வைத்த திருப்தி அவனுக்குள் நிறைந்திருந்தது.  எனினும்  எளிதாய் வேறு தொழில் ஈடுபட மனக்கூச்சம் தடுத்தது.  இருந்தபோதிலும், கையில் மிச்சமிருந்த பணத்தில் ஏதேதோ தொழில் செய்து பார்த்தான். எதுவும் கை கொடுக்கவில்லை.   பணம் தான் கரைந்தது.
ஒரு நாள் கையில் காசு எதுவும் இல்லை. அப்போது  வந்த ஒரு ஆக்கர் கடைக்காரனிடம், செல்வி தடுத்த போதும்  அந்த ரெக்கார்டு பிளேயரைத் தூக்கிக்  கொடுத்து விட்டான்.
                                                 
      "ரெக்கார்டு பிளேயரை  கையில எடுத்து வைச்சிகிட்டு என்ன ஆராய்ச்சி...."
 குரல் வந்த பக்கம்   திரும்பிப் பார்த்தார் ராஜகோபால்.
வீட்டின் சொந்தக்காரர் அந்த பிரெஞ்ச் தாடிக்காரர் நின்றிருந்தார்.
"இது எப்பிடி உங்களுக்கு....?"
பவ்யமாகக் கேட்டார் ராஜகோபால்.
"எதுக்கு கேட்கிற...?"
"இது எனக்குள்ளதாக்கும்... நான் சவுண்ட் சர்வீஸ்... வைச்சிருந்தப்ப.....முதல் முதல்ல வாங்கினது...     ஒருகட்டத்துல கஷ்டம் வந்து கையில காசு இல்லாம இருந்தப்ப  இத ஒரு ஆக்கர் கடைக்காரனுக்கு எடுத்துக் கொடுத்தேன்..."
"அப்படியா... எனக்கும்  ஒரு ஆக்கர் கடைக்காரன்தான் கொண்டு வந்து கொடுத்தான்... எங்கிட்டயிருந்து  நல்ல விலையும் அவன் வாங்கினானே..." என்றார்.
"இப்ப இத எனக்குத் தருவியளா...?  நீங்க வாங்கின விலையத் தாரேன்.." ராஜகோபாலின் குரல்  உடைந்திருந்தது.
"ஹஹ்...ஹஹ்... ஹ..." என சிரித்தார் வீட்டுக்குச் சொந்தக்காரர்
அப்போது அங்கு வந்த பெயின்டிங் கான்டிராக்டர் "ஓய்... வீட்டுல பெயின்ட் அடிச்ச  வந்தியளா.. இல்ல.. வீட்ட வெல பேச வந்தியளா..." என்று  இடை மறித்து குரல் உயர்த்தினார்.  
இதற்கிடையே
"எங்கிட்ட....கொடுங்க.. கொடுங்க..." என்று சொல்லியவாறு வீட்டுக்குச் சொந்தக்காரர் ராஜகோபாலின் கையிலிருந்த அந்த ரெக்கார்டு பிளேயரை வாங்கிக் கொண்டு விறுவிறுப்பாக அடுத்த அறைக்கு நடந்தார்.
        அன்றைய தினம் சற்று நேரத்திலெல்லாம்  வேலை முடிவுக்கு வந்தது.

            மறுநாள் ராஜகோபால் அந்த வீட்டிற்கு  வேலைக்குச்  செல்லவில்லை.








வியாழன், 14 மே, 2015



குமரி மாவட்ட  அணைகளும்.... கால்வாய்களும்...


லாசர் ஜோசப்


கன்னியாகுமரி மாவட்டத்தில்  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளும், அவற்றின் கால்வாய்களும்,   நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா உள்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் 96 ஆயிரம்   ஏக்கர் நிலத்தை  பொன் விளையும் பூமியாக மாற்றுகின்றன.  இந்த அணைகளையும், கால்வாய்களையும் நம்பித் தான் பெரும்பாலான மக்களின் வாழ்வும், வளமும் அமைந்துள்ளது. இந்த  அணைகளும், அதன் கால்வாய்களும், மிகச்சிறந்த  பொறியியல் முறையில் திட்டமிட்டப்பட்டு மாவட்டம் முழுமைக்கும்  பாசனம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,  தனிச்சிறப்பாகும். 

மூன்று நிலைகள் இம்மாவட்ட  நீர்ப்பாசனத்தை பாண்டியன் அணைக்கட்டப்படுவதற்கு முன்பு இருந்த முறை, பாண்டியன் அணை கட்டப்பட்ட பிறகு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கட்டப்பட்ட பின்பு உள்ள நிலை என 3 வகைகளாகப் பிரிக்கலாம். தொடக்கத்தில் குறிப்பாக   பாண்டியன் அணை கட்டப்படுவற்கு முன்பு இம்மாவட்டப் பகுதிகளில் பெரும்பாலும் குளத்துப் பாசனமே இருந்து வந்தது.

பாண்டியன் அணைக்கட்டு:
இம்மாவட்டத்தில் தேவையான நீர் வளம் இருந்தும் மக்கள்  விவசாயம் செய்யமுடியாமல் இருக்கும் நிலையைப் பார்த்த பாண்டிய மன்னன் ராஜசிம்மன்  கி.பி. 900 ஆம் ஆண்டு பரளியாற்றின் குறுக்கே பாண்டியன்  அணைக்கட்டு அமைத்தான்.  இதற்கு தலை அணை என்று மற்றொரு பெயரும் உண்டு. இதிலிருந்து பாண்டியன்  கால்வாய் வழியாக தண்ணீரை பழையாறு வடிநிலப்  பகுதிக்கு கொண்டு சென்று அதிலிருந்து தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதி பாசனத்திற்கு வழி செய்யப்பட்டது.

புத்தன் அணைக்கட்டு:
பாண்டியன் அணைக்கட்டு கால வெள்ளத்தில் தூர் நிறைந்தது. மேலும் பாண்டியன் கால்வாய் மூலம் நாஞ்சில் நாட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பாசனம் கிடைத்தது, எடநாடு பகுதிகளுக்கு பாசனம் கிடைக்கவில்லை.  இதனால் 1750 ஆண்டு பாண்டியன் அணைக்கு கீழே சுமார் 400 மீட்டர் தூரத்தில் புத்தன் அணை என்று மற்றொரு அணையை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா கட்டினார். இதிலிருந்து 19 மைல் நீளத்திற்கு பத்மநாபபுரம் புத்தனாறு என்று கால்வாயை வெட்டி எடுநாட்டுப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் அளித்தார்.   (இந்த அணை  1992  ஆம் ஆண்டு,  வெள்ளப் பெருக்கத்தின் போது சேதமானதைத்  தொடர்ந்து இப்பகுதியில் புதிய அணை கட்டப்பட்டுள்ளது.)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் விரிவான பாசனமும்:

பேச்சிப்பாறை அணை: குமரி மாவட்டத்தில் பிராதான ஆறுகளில் மற்றொன்றான கோதையாற்றுத் தண்ணீர் வீணாக கடலில் கலப்பது  தடுத்து நிறுத்தி,  குமரி மாவட்டப் பகுதிகள் முழுமைக்கும் பாசன வசதி அளிப்பது தொடர்பாக பேச்சிப்பாறையில் அணை கட்ட  திருவிதாங்கூர் மன்னர்கள் முடிவு செய்தனர்.  இதைத் தொடர்ந்து  1837 ஆம் ஆண்டு கேப்டர் ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேயர் கோதையாற்றின் குறுக்கே அணை கட்டவேண்டுமென்று அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால் இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை. அதன்பின்பு  1850 ம் ஆண்டு ஜெனரல் குல்லன் அரசுக்கு மீண்டும் ஒரு பரிந்துரையை வைத்தார். அதன்பின்பு டி. மாதவராவ்  அணைகட்டும் திட்டத்திற்கு உயிர் கொடுத்தார். ஆனால் அதற்கான நிதி ஆதாரம் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் திருவிதாங்கூர் பிரதம பொறியாளராகப் பொறுப்பேற்றார் ஆங்கிலேயப் பொறியாளர்  ஏ.எச். ஜோசப். இவர் 1880 ல் கேப்டன் டபிள்யூ. எச். ஹார்ஸ்லி என்ற பொறியாளருடன் இணைந்து  ஒரு  திட்டத்தை தயாரித்தார். இத்திட்டத்தை திவான் நாணுபிள்ளை அரசிடம் பரிந்துரை  செய்தார்.  அதன்பின்பு பிரதம பொறியாளராக வந்த வி. ராமசாமி ஐயங்கார், மேஜர் மீட், எஸ். ஹார்ஸ்லி ஆதரவுடன் திருவிதாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் இந்த அணைகட்டும் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிட்டார். பின்னர் பொறியாளர்கள் ஏ.எச். யாகூப், ஜி.டி. வால்ஸ், கர்னல் ஸ்மார்ட் ஆகியோரது தலைமையில் பொறியாளர் எம்.ஏ. மீடின், ரூ. 28 லட்சம் திட்ட மதிப்பீட்டில் இப்பணியை 1897 ல்  தொடங்கினார்.  பின்னர்  இப்பணியில் ஹம்ரே அலக்சாண்டர் மின்சின் முக்கியப் பொறியாளராக இணைந்து அணைக் கட்டும் பணிகளை முன்னின்று நடத்தினார்.  1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணை கட்டும் பணிகள் 1906 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதன் கட்டுமான செலவு ரூ. 26.10 லடசம்.
அணை கட்டப்பட்ட போது அதன் நீர் மட்ட உரயம் 42 அடியாகத் தான் இருந்தது. பின்னர் 1964-1970 ல் ரூ. 15 லட்சம் செலவில் அணையின் நீர்மட்ட உயரம் மேலும் 6 அடி உயர்த்தப்பட்டு 48 அடியாக மாற்றப்பட்டது.

அணையின் கட்டுமானம்: இந்த உட்புறம் சுண்ணாம்பு, செங்கல்,  ஜல்லி கற்காரையால் கட்டப்பட்டு, முகப்பு சுண்ணாம்புக் கலவையுடன் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்த அணையி்ல் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருள்கள் அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரியில் சோதிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்ததப்பட்டுள்ளன.

கால்வாய்: இந்த அணையிலிருந்து தொடங்கும் கால்வாய்க்கு கோதையாறு இடது கரை கால்வாய் என்று பெயர் இக்கால்வாய்  பரளியாற்றின் குறுக்கேவுள்ள புத்தன் அணையில் இணைகிறது.

பேச்சிப்பாறை அணை பயோ டேட்டா:

கட்டப்பட்ட வருடம் - 1897-1906
அணையின் நீளம் - 1396 அடி
அணை மாதிரி - கற்காரை அணை
முழு நீர் கொள்ளளவு - 48 அடி
நிறை நீர் பரப்பு - 15 ச.கி.மீ.
மொத்த கொள்ளளவு - 5306 மி.க.அடி.
நிகர கொள்ளளவு - 4350 மி.க.அடி
முடங்கிய கொள்ளளவு - 956 மி.க.அடி
முடங்கிய கொள்ளளவு உயரம் - 47 அடி
ஏந்தள பரப்பு - 204.8 ச.கி.மீ.
சராசரி மழையளவு - 2180 மி.மீ / ஆண்டுக்கு
அதிக பட்ச உபரி நீர் வெளியேறும் திறன் - 39000 c/s
உபரி நீர் போக்கி - 6 எண்ணம் 40 X 15 அடி
பாசனக் காலம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை

பெருஞ்சாணி அணை: மாவட்டத்தில்  பாசன பரப்பளவை மேலும் அதிகரிக்கும் வகையி்ல  பரளியாற்றின் குறுக்கே புத்தன் அணைக்கு மேல் பகுதியில்  (சற்று தொலைவில்) பெருஞ்சாணி அணை மார்த்தாண்ட வர்மா ஸ்ரீசித்திரை திருநாள் பாலராம வர்மா  ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இப்பணிகள் 1948 ல் தொடங்கப்பட்டு   1953 ல் இந்த அணை கட்டும் பணிகள் நிறைவடைந்தன.
முதலில் 71 அடி உயரமாக இருந்த இந்த அணை 1969 ல் 77 அடியாக உயர்த்தப்பட்டது. இந்த அணையின் திட்டச் செலவு ரூ. 62.71 லட்சம்.

புத்தன் அணை: பேச்சிப்பாறை அணையின் பிரதானக் கால்வாயான கோதையாறு இடது கரைக்கால்வாயும், பெருஞ்சாணி அணையிலிரந்து வெளியேறும் தண்ணீரும் புத்தன் அணையில் கலப்பதே குமரி மாவட்ட பாசன கால்வாய்களின் வடிவமைப்பின் குறிபிட்டத்தக்க அம்சமாகும். . இதில் புத்தன்  அணையிலிருந்து பாண்டியன் கால்வாய் மற்றும் பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய் என இரு கால்வாய்கள் பிரிகின்றன. இதில் பாண்டியன் கால்வாய் 2.5 கி.மீ. தொலைவு பாய்ந்து செல்லன்துருத்தி என்ற இடத்தில் தோவாளைக் கால்வாய், ரெகுலேட்டர் கால்வாய் என  இரண்டாகப் பிரிகிறது இதில் தோவாளை கால்வாய், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வரை செல்கிறது. மற்றொருகால்வாயான  ரெகுலேட்டர் கால்வாய் 1.60 கி.மீ. பாய்ந்து சுருளகோடு பகுதியில் செல்கிறது.  அங்கு இக்கால்வாய் இரண்டாகப் பிரிகிறது. இதில் ஒன்று அனந்தானாறு கால்வாயாகும்.  மற்றொன்று பழையாற்றின் தொடக்கமாக அமைகிறது.  பழையாறு ஆயிரக்கணக்கான ஏக்கர்  பாசனப்பகுதிகளுக்கு ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றில் சாட்டுப்புதூர் அணையிலிருந்து   நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற  கால்வாய் தொடங்கி நாஞ்சில் நாட்டில் குறி்ப்பிட்டப் பகுதிகளுக்கு  பாசனம் அளிக்கிறது. இது தவிர பழையாற்றின் குறுக்கே  வீரப்புலி அணை, குட்டி அணை, பள்ளி கொண்டான் அணை, செட்டித் தோப்பு அணை, வீர நாராயண மங்கலம் அணை, சோழன்திட்டை அணை, பிள்ள பெத்த அணை, மிஷின் அணை என 11 சிறிய அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

சிற்றாறு அணைகள்: மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை மேலும் பெருக்கும் வகையிலும்,  வறட்சி மிகுந்து காணப்பட்ட நட்டாலம், கருங்கல், புதுக்கடை உள்ளிட்ட மையப்பகுதிகளுக்கு பாசனம் அளிக்கும் வகையிலும் கோதையாற்றின் கிளை ஆறான சிற்றாற்றின் குறுக்கே சிற்றாறு அணை 1 மற்றும் சிற்றாறு 2 என இரு அணைகள் உள்ளன.  இந்த அணைகள் தலா 18 அடி உயரத்தில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டன. இந்த இரு அணைகளுக்கும்  இடையில் இணைப்புக் கால்வாய் குறுகிய தூரத்தில் உள்ளதால், சிற்றாறு 1 அணையிலிருந்து மட்டுமே கால்வாய் உள்ளது. இதற்கு சிற்றாறு பட்டணம் கால்வாய் என்று பெயர். இக்கால்வாய் அணையிலிருந்து தொடங்கி 5 ஆவது கி.மீ. தூரத்தில் கோதையாறு இடது கரைக் கால்வாயில் இணைகிறது. பின்னர்  10.15 கி.மீ. தூரம்  அதனுடன் இணைந்து பாய்ந்து குலசேகரம் அருகே அரியாம்பகோடு என்ற இடத்திலிருந்து தனியாகப் பிரிந்து செல்கிறது.

மாம்பழத்துறையாறு அணை: இந்த அணை வில்லுக்குறிலிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்திட்டம் குமரி மாவட்டத்தின் கல்குளம் தாலுகாவில் ஓடும் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். இதன் மொத்த நீர் மட்ட உயரம் 54 அடியாகும்.  மாம்பழத்துறை ஆறானது மருத்தூர் மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 838 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, பின் கடல் மட்டத்தில் இருந்து 78 மீட்டர் உயரத்தில் சமதளத்தை அடைகிறது. சுமார் 4 கி.மீ., நீளத்திற்கு இந்த ஆறு இதே பெயரில் ஓடி, பின் தூவலாறு என்ற பெயரில் 2.50 கி.மீ. தூரத்தைக்  கடந்து இறுதியில் தக்கலை அருகில் உள்ள வள்ளியாற்றுடன் இணைகிறது. வள்ளியாறு வேளிமலையில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி 19.20 கி.மீ., தூரத்திற்கு பாய்ந்து இறுதியில் கடியப்பட்டினம் அருகில் அரபிக்கடலுடன் கலக்கிறது. இதன் நீர்ப்பரப்பு 2.80 சதுர மைல்கள் கொண்ட மலைப்பகுதியாகும். இந்த ஆற்றில் ஏற்கனவே உள்ள பாசன பரப்பான 455.76 ஏக்கருக்கு பாசன  செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் உள்ள உபரி நீர் கோதையாறு திட்டத்தின் பத்மனாபபுரம் புத்தனாறு கால்வாயில்  திருப்பி விடப்படுகிறது. இதனால் மிச்சப்படும் தண்ணீர் மாவட்டத்தின் பிற பகுதியிலுள்ள பாசன வசதியற்ற சுமார் 450 ஏக்கர் வறண்ட நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.


முக்கிய கால்வாய்கள் மற்றும் அவற்றின் கிளைக்  கால்வாய்கள்

1. தோவாளை கால்வாய்:
அ.  தோவாளை பிரதான கால்வாய் (49.1 கி.மீ.) 
ஆ. மருத்துவாழ் மலைக் கால்வாய் (5.79. கி.மீ.)
இ. கிழக்கு மேஜர் கால்வாய் (3.253 கி.மீ.)
ஈ. கிழக்கு மைனர் கால்வாய் (3.208 கி.மீ.)
உ. மேற்கு கிளைக் கால்வாய் (2.819 கி.மீ.)
ஊ. ராதாபுரம் கால்வாய் (28 கீ.மீ.)

2. அனந்தனாறு கால்வாய்:
அ. மேற்கு கிளைக்கால்வாய் (2.99 கி.மீ.)
ஆ. ஏ.கே. கால்வாய் (5.97 கி.மீ.)
இ. கிருஷ்ணன்கோயில் கால்வாய் (2.203 கி.மீ.)
ஈ. ஆசாரிபள்ளம் கால்வாய் (6.49 கி.மீ.)
உ. கிழக்கு பிராதன கால்வாய் (5.475 கி.மீ.)
ஊ. அத்திக்கடை கால்வாய் (1.157 கீ.மீ.)
எ. கோட்டாறு கால்வாய் (3.54 கி.மீ.)
ஏ. தெங்கம்புதூர் கால்வாய் (3.50 கி.மீ.)
ஐ. காரவிளை கால்வாய் (7.79 கி.மீ.)
ஒ.  கிருஷ்ணன் புதூர் கால்வாய் (9.84 கி.மீ.)

3. பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய்:
அ. பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய்
ஆ. இரட்டைக் கரை கால்வாய் (6.87 கி.மீ.)
இ. திருவிதாங்கோடு கால்வாய் (25.77 கி.மீ.)

4. நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் (27.70 கி.மீ.)

சிற்றாறு பட்டணம்கால்வாய்:
சிற்றாறு பட்டணம் கால்வாய் (43 கி.மீ.)
அ. புதுக்கடை கிளை (5.96 கி.மீ.)
ஆ. கருங்கல் கிளை (5.96 கி.மீ.)
இ. தொடிவெட்டி கிளை (31.30 கி.மீ.)
ஈ. கீழ்குளம் கிளை  (31.30 கி.மீ.)


5. அருவிக்கரை அணைக் கட்டு:

அ. அருவிக்கரை இடது கரை கால்வாய் (12.874 கி.மீ.)
ஆ. அருவிக்கரை வலது கரைக் கால்வாய் (4.224 கி.மீ.) இவ்விரு கால்வாய்களும் பரளியாற்றின் குறுக்கே திருவட்டாறு அருகே அருவிக்கரை அணைக்கட்டிலிருந்து தொடங்கி திருவட்டாறு, ஆற்றூ், சாரூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு பாசனம் அளிக்கின்றன.

6. திற்பரப்பு அணைக் கட்டு:

திற்பரப்பு இடது கரைக் கால்வாய் (18.40 கி.மீ.)
திற்பரப்பு வலது கரைக் கால்வாய் (4.24 கி.மீ.) இவ்விரு கால்வாய்களும் கோதையாற்றின் குறுக்கே திற்பரப்பு அருவி அருகில் அமைந்துள்ள அணைக்கட்டிலிருந்து தொடங்கி பாசனம் அளிக்கின்றன.

7. நெய்யாறு  கால்வாய் :

நெய்யாறு நீர்த்தேக்கம் கேரளாவில் அமைந்துள்ளது. நெய்யாறு நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர கி.மீ ஆகும். இதில் சுமார் 12.9 சதுர கி.மீ தமிழகத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த பாசனப் பரப்பு 38,000 ஏக்கர் ஆகும்.
நெய்யாறு நீர்த்தேக்கத்திலிருந்து இடது புறம் ஒரு கால்வாயும், வலது புறம் ஒரு கால்வாயும் வெட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து செல்லும் வலது புற கால்வாய் கேரள மாநிலத்திற்கு மட்டுமே பாசனம் அளிக்கிறது. இடது புற கால்வாய் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பாசனம் அளிக்கிறது. இடது புற கால்வாயின் மொத்த நீளம் 38.82 கி.மீ மற்றும் இதன் பாசனப் பரப்பு 19,000 ஏக்கர் ஆகும். இந்த கால்வாயின் முடிவில் மெட்ராஸ் ரெகுலேட்டர் (கொல்லங்கோடு ரெகுலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெகுலேட்டர் கேரள எல்லையில் அமைந்துள்ளது.
மெட்ராஸ் ரெகுலேட்டரின் கீழ்ப்பகுதியில் உள்ள மெட்ராஸ் கால்வாயில் (22.374 கி.மீ) உள்ள 6 கிளை வாய்க்கால்களின் மூலம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திலுள்ள 9,200 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த பாசனப் பரப்பிற்காக மெட்ராஸ் ரெகுலேட்டரிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய நீரின் அளவு 150 கன அடி ஆகும்.
நெய்யாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்திற்கு 1970–71 ஆம் ஆண்டிலிருந்து 2003–-04 ஆம் ஆண்டு வரை நிர்ணயம் செய்யப்பட்ட 150 கன அடியை விட குறைவாகவே கேரளம் அளித்துள்ளது. 2004 ம் ஆண்டிலிருந்து தண்ணீர் தருவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

இதன் கிளைக் கால்வாய்கள்:
அ. முல்லையாறு கிளை (12.40 கி.மீ.)
ஆ. பாகோடு கிளை (6.50 கி.மீ.)
இ. மருதங்கோடு கிளை  (5.40 கி.மீ.)
ஈ. மங்காடு கிளை (5.40 கி.மீ.)
உ. மெதுகும்மல் கிளை (7.20 கி.மீ.)
ஊ. கொல்லங்கோடு கிளை (6.80 கி.மீ.)
எ. வெங்கஞ்சி கிளை (6.80 கி.மீ.)

இவ்வாறாக மாவட்டத்தில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு பிரதான அணைகளுடன், மாம்பழத்துறையாறு அணையும், இவைகளில் இருந்து வரும் கால்வாய்களும், மாவட்டத்தை வளப்படுத்தி செழிப்பாக்குகின்றன.
இந்த அணைகளையும், கால்வாய்களையும் காலத்திற்கேற்ற வகையில் சீரமைத்து, பாதுகாப்பது நமது கடமையாகும். குறிப்பாக ஆறுகளையும், அணைகளையும்,  கால்வாய்களையும் மாசுபடாமல் பாதுகாப்பது நமது தலையாய கடைமை என்பதை உணர்வோம்.

(பொதுப்பணித் நீராதரப் பிரிவு,  முன்னோடி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை).


Key words: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன் அணை, பழையாறு, கோதையாறு இடது கரை கால்வாய், நெய்யாறு அணை, தோவாளை கால்வாய், அனந்தனாறு கால்வாய்.






திங்கள், 26 ஜனவரி, 2015


பத்மநாபா தியேட்டரும்... நான்கு ரூபாயும்...

First Published : 25 January 2015 02:00 PM IST 

லாசர் ஜோசப்




















நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது.
 நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல வேண்டும். பயணக் களைப்பு உடலைச் சோர்வடைய வைத்திருக்கிறது.
 ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி டீ குடிக்கச் சென்றனர். எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. ஊருக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. குடும்பத்தில் நல்லது கெட்டது என எதிலும் பங்கேற்கவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராக காலங்கள் போனது தெரியவில்லை. இயக்குநராகாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்ற சபதத்தால் திருமணம் இன்னும் நடைபெறவில்லை. எப்போது இயக்குநராவேன் என்றும் தெரியவில்லை.
 ஊரில் நண்பன் மகேசின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள். மகேசு தான் போனில் அழுதவாறு தகவல் சொன்னான். மனது பாரமாகிக் கிடக்கிறது ஏதேதோ நினைவுகள் மனதை அழுத்துகிறது. ஊருக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
 ஓட்டுநரும், நடத்துநரும் பஸ்சில் ஏறிக் கொண்டனர். கூடவே, வேறு சில பயணிகளும் ஏறினர். பஸ் புறப்பட்டது.
 எனக்கு முன் இருக்கையில் இருந்த யாரோ ஒரு பயணி குலசேகரம் பத்மநாபா தியேட்டர் ஸ்டாப் என்று டிக்கட் கேட்டார்.
 பத்மநாபா தியேட்டர்...?  எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதை உணர்ந்தேன்.

 திருநந்திக்கரை முத்துசாமியின் ஹோட்டலுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த குலசேகரம் பத்மநாபா தியேட்டரின் சாக்குத் தட்டியில், ஊமை விழிகள் சினிமாவின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த நிமிடத்திலிருந்து அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள் ஏற்பட்டுவிட்டது. குலசேகரத்திலுள்ள தியேட்டர்களுக்கு "ஊமை விழிகள்' படம் எப்போது வரும் என்று நான் காத்திருந்தேன். அந்த அளவுக்கு அந்த படத்தின் மீதான ஆவலை என்னுடைய 9 பி வகுப்பிலுள்ள கண்ணனும், குமரேசனும் ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் இருவரும் யாருடனோ நாகர்கோயில் ராஜேஷ் தியேட்டருக்குச் சென்று அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்திருந்தனர். படத்தின் கதையை வகுப்புகளின் இடைவேளைகளில் அவர்கள் சொல்லியபோது நான் மட்டுமல்ல எங்கள் வகுப்பிலுள்ள சுரேஷ், சரவணன், அலெக்ஸ், பீட்டர் என எல்லோருக்கும் மிரட்சியும், பரவசமும் ஏற்பட்டது.
 ""திகில் படம்... இல்லியாடே...'' என்றேன் கண்ணனிடம்.
 ""திகிலும்... கொலையும் தான்... '' என்றான் கண்ணன்
 ""இது போல படம் நான் இதுவரை பார்த்ததேயில்லை'' என்றேன்.
 ""படத்திலே சில சீன்ல நம்ம பயந்திருவோம்...'' அவன் பதில் சொன்னான்.
 ""பாட்டெல்லாம் சூப்பர்.... சினிமா காலேஜ் மாணவர்கள் எடுத்தப் படமாக்கும்...'' குமரேசன் பரவசமாய் சொன்னான்.
 ""கல்யாண வீடுகள்ல இப்ப இந்த படத்துக்கப் பாட்டுதான்...'' என்று அலெக்ஸ் இடையில் புகுந்தான்.
 ""படத்தில அடி உண்டா...'' இது பீட்டர்
 ""வித்தியாசமான அடி...'' என்று அதற்குப் பதில் சொன்னான் கண்ணன்.
 இது போன்ற ஒரு படத்தை பார்க்காமலிருந்து விடக்கூடாது என துடித்தோம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான நாங்கள் தியேட்டர்களுக்குச் சென்று அத்தனை எளிதில் படத்தைப் பார்த்து விடமுடியுமா என்ன.. அதுக்கு காசு வேணும் இல்லையின்னா யாராவது பெரியவர்கள் கூட்டிகிட்டு போகணும்

 இப்போது பத்மநாபா தியேட்டருக்கு "ஊமை விழிகள்' படம் வந்து விட்டது. என்னிடம் சினிமா டிக்கட்டிற்கான காசு கூட இல்லையே... யாராவது இலவச டிக்கட்டாக என்னை அழைத்துச் செல்வார்களா... யாரிடம் கேட்பது.... யாரிடமாவது இரண்டு ரூபாய் கடன் வாங்கிவிட்டு தனியாக படத்திற்கு சென்றுவிடுவோமா... தனியே படத்திற்குச் சென்றால் வீட்டில் உதை விழாதா.... அச்சத்திலும், குழப்பத்திலுமாக இரண்டு நாள்கள் ஓடிவிட்டன. அன்று ஞாயிற்றுக்கிழமை திங்கள்கிழமை மீண்டும் பள்ளிக்கு செல்லவேண்டுமென்பதால் அன்றே படத்தைப் பார்த்தாகவேண்டுமென்ற தவிப்பில் துடித்தேன். அப்போதுதான் மகேசின் ஞாபகம் வந்தது.
 மகேசு என்னைவிட ஒரு வயது சிறியவன். 8 ஏ இல் படிக்கிறான். அவனும் நான் படிக்கும் திருநந்திக்கரை பள்ளிக்கூடம்தான். அவன் அம்மா வீட்டோடு நடத்தும் விறகுக் கடைக்கு அடிக்கடி விறகு வாங்க நான் சென்றதால் எனக்கு நெருக்கமாகிவிட்டவன். சிவன் கோயில் தோட்டத்தில திருட்டு மாங்காய் பறித்து தின்போம். அவனும், நானும் எனது தம்பியும் திருநந்திக்கரை பாலத்திலிருந்து கால்வாய்க்குள் குதித்து காலம் நேரம் தெரியாமல் நீச்சல் அடிப்போம்... தண்ணீரில் தொட்டு விளையாடுவோம். காசு விஷயத்தில் மகா கஞ்சன் அவன். 5 பைசா கிடைச்சாக் கூட கூட்டி வைக்கணுமிண்ணு தான் நெனப்பான். பள்ளியில், வகுப்பு இடைவேளைகளில் காம்பவுண்டுக்கு வெளியே நிற்கும் ஐஸ் காரனிடம் எல்லோரும் ஐஸ் வாங்கிக் குடிக்கும் போது இவன் மட்டும் காசு செலவாகுமே என வேடிக்கைப் பார்த்து நிற்பான்.
 அப்பா கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருந்தால் சைக்கிள் வீட்டிலேயே இருந்தது. நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு மகேசின் வீட்டிற்குப் போனேன்.
 ""மகேசு...'' என குரல் கொடுத்த போது வெளியே வந்தான்.
 ""படத்துக்கு வாரியால... ஊமை விழிகள் படம்''. மெல்லியக் குரலில் கேட்டேன்.
 ""படத்தில அடி உண்டா...''
 ""உண்டு...''
 ""யாரு கூட்டிகிட்டுப் போவா....''
 ""நம்ம ரெண்டு பேரும் தனியா...''
 ""அப்ப... நான் வரல்ல...''
 ""லே... இன்னைக்குப் போனதான் உண்டு அடுத்த வாரம் படம் மாறியிரும்...''
 ""வீட்டுல தெரிஞ்சா...''
 ""மாட்டினி ஷோ தானல... வீட்டுல தெரியாம போயிட்டு
 வந்திரலாம்...''
 ""யாராவது வீட்டுல சொன்னா...''
 ""அடி கெடச்சா வாங்கிக்கிடுலாம்பில...''
 ""ரூபா இருக்கால...''
 ""இல்ல... நீ கூட்டி வைச்சிருக்கிறதுலயிருந்து எனக்கு சேர்த்து நாலு ரூபா எடுத்துக்கிட்டுவா... எனக்குள்ள ரெண்டு ரூபாய, ரெண்டு நாளயில்ல ஒனக்கு திருப்பித் தாறேன்... சைக்கிளுக்கு எங்கிட்ட 50 பைசா இருக்கு...''
 மகேசு கையைப் பிசைந்தான், பிறகு ""சரி... ''என்று தலையசைத்தான்.
 ""எனக்குப் பசிக்கல.. ஒனக்குப் பசிக்குதா...'' எனக் கேட்டேன்
 ""பசிக்குது...'' என்றான்.
 ""அப்ப நீ சோறு சாப்பிட்டுக்கிட்டு வா... நான் வெளியில நிக்கிறேன்...'' என்றேன்.
 என்னையும், தம்பியையும் சைக்கிளில், பின்னாலும், முன்னாலும் வைத்து இரண்டு முறை பத்மநாபா தியேட்டருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அப்பா. ஒரு முறை "சிகப்பு மல்லி' மற்றொரு முறை "நான் சிகப்பு மனிதன்'. அப்பாவுக்கு சிகப்பு படங்கள் தான் பிடிக்கும். தியேட்டரில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியா டிக்கட் கவுண்டர் இருக்கிறது. சில ஆண்கள் அவர்களுக்கான கவுண்டரில் வரிசையாய் நின்று டிக்கெட் வாங்கிவிட்டு தாங்கள் அழைத்து வந்த பெண்களையும், குழந்தைகளையும் கேட் வழியாக உள்ளே அழைத்துச் செல்கின்றனர். தம்பியும் நானும் அப்பாவுடன் வரிசையில்தான் நிற்போம்.
 டிக்கெட் எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இரண்டு பெரிய கருங்கல் சுவர்களுக்கிடையே நடந்து செல்ல வேண்டும். எங்களுக்கு ஏதோ ஆழமான பள்ளத்திற்குள் நடப்பது போல் இருக்கும். டிக்கெட் வாங்கிவிட்டு வெளியே வந்தால் தான் மூச்சுவெளியே வரும்.
 ஒரு முறை படம் தொடங்குவதற்கு முன்பு ...
 ""பத்மநாபாண்ணா யாருண்ணு தெரியுமால...'' என்று அப்பா என்னிடம் கேட்டார். அப்போது தம்பி முந்திக் கொண்டு, ""சுவாமி... தெய்வம்... திருவிதாங்கூர் ராஜாக்களின் தெய்வம்...'' என்றான்.
 ""பரவாயில்லியே.... நல்லா தெரிஞ்சு வைச்சிருக்க....இவனுக்குத் தான் தெரியல்ல.. இவனுக்கு எப்பவும் சினிமா... சினிமான்னு தான் நெனப்பு....'' அப்பா என் தோளில் விரலால் குத்தியவாறு சொன்னார். தம்பி சத்தமாய் சிரித்தான்.
 ""நம்ம மாவட்டத்திலவுள்ள பெரிய டூரிங் தியேட்டருல இந்த தியேட்டரும் ஒண்ணு... இந்த தியேட்டருல நடுவுல தூண் இல்ல பாத்தீங்களால...'' அப்பா மீண்டும் தொடர்ந்தார்.
 அப்போது ""நடுவுல தூண் இருந்தா படம் மறையும் இல்லியா அப்பா...'' என்று தம்பி விளக்கம் சொன்னான். தரை, பெஞ்ச், முதல்வகுப்பு, பால்கனி என தரம் பிரிக்கப்பட்ட தியேட்டரின் இருக்கைகளைப் பார்த்த தம்பி, ""அப்பா... ஒரு நாள் பால்கனிக்கு கூட்டிகிட்டு போகுமாப்பா...?'' எனக் கேட்டான். உடனே நான்.... ""சாருக்கு பால்கனி கேக்குதாக்கும்.... எங்கயிருந்தாலும் ஒரே மாதிரிதான் படம் தெரியும்... எனக்கு நாம இருக்கிற இந்த பெஞ்சை விட தரை டிக்கட்டுல இருந்து படம் பார்த்தா நல்லா இருக்குமுண்ணு தோணுது.... அப்பதான் நடிகர்களை கிட்ட இருந்து பார்த்தது போல இருக்கும்....'' என்றேன். படம் தொடங்குவதற்கான மணி ஒலித்தது. பேச்சு நின்றது.
 மகேசு சாப்பிட்டுகிட்டு வெளியே வந்தான். நான் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினேன். மகேசு கேரியரில் ஏறிக் கொண்டான். சைக்கிளின் பெடல்களை அழுத்தமாக மிதித்தேன். சைக்கிள் வேகமெடுத்து தும்பகோடு, ஆரணிவிளை, காவல்ஸ்தலம் என விரைந்தது. சரியாகப் பத்து நிமிடத்தில் தியேட்டர் பக்கம் வந்துவிட்டோம்.
 தியேட்டர் பக்கம் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. கவுண்டர் வரிசை சாலையைத் தொட்டு நின்றது. எனக்குள் திடீரென்று கலக்கம். இந்தக் கூட்ட நெரிசல்ல நமக்கு டிக்கட் கிடைக்குமா... மகேசை வரிசையில் நிற்க வைத்து விட்டு சைக்கிள் வைக்கும் இடத்திற்கு சென்றேன். ஏற்கனவே அங்கு பல சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு நெருக்கமாக எனது சைக்கிளையும் வைத்து விட்டு கையில் வைத்திருந்த 50 காசுகளை கட்டணமாகக் கொடுத்து சைக்கிளுக்கான டிக்கட் பெற்றேன்.
 தியேட்டரில் ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாட்டை நிறுத்திவிட்டு "விநாயகனே... வினைதீர்ப்பவனே...' போட்டார்கள். உடனே டிக்கட் கவுண்டர் வரிசையில் மேலும் பலர் இணைந்து கொண்டார்கள். வரிசை மேலும் நீண்டு போனது. நான் மகேசை கண்டுபிடித்து அருகில் நின்று கொண்டேன். டிக்கட் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
 எங்களுக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள் எங்களைப் பிடித்து அகற்றிவிட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
 ""கூட்டத்தைப் பார்த்தால் இன்னக்கி எல்லாருக்கும் டிக்கட் கிடைக்காது போலத் தான் இருக்கு...'' வரிசையில் நின்ற ஒருவன் சொன்னான்.
 எனக்குள் கலக்கம் மேலும் அதிகரித்தது. இந்த நெரிசலில் டிக்கட் எடுத்து விடமுடியுமா...
 சிலர் வரிசையில் முன்னே நின்றவர்களிடம் காசைக் கொடுத்து டிக்கட் எடுக்கச் சொன்னார்கள்..
 ""மகேசு... நமக்கும் முன்னால் நிற்கும் அண்ணன்கள் யாரிடமாவது ரூபாயக் கொடுத்து டிக்கட் எடுக்கச் சொல்வோம்...'' என்றேன்.
 ""ம்...'' என்று தலையாட்டினான்.
 சுருள்முடித் தலையுடன் கட்டம் போட்ட சட்டை அணிந்து வரிசையில் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தான் ஒரு அண்ணண்.
 ""அண்ணா ரெண்டு தரை டிக்கட் எடுத்து தருமா?...''
 ""சரி...''
 மகேசின் கையில் இருந்த நான்கு ரூபாயை வாங்கி அவனிடம் கொடுத்தேன். பின்னர் வரிசையிலிருந்து விலகி கேட்டுக்கு அருகில் அந்த அண்ணனின் வருகைக்காக இருவரும் காத்திருந்தோம்.
 டிக்கட் எடுத்தவர்கள் விரைவாய் தியேட்டருக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த அந்த சுருள் முடி, கட்டம் போட்ட சட்டை அண்ணன் எங்கள் முன்னாள் கடந்துப் போனான்.
 ""அண்ணா டிக்கட்...'' என்று கத்தினோம் அவனைப் பார்த்து
 ""யாதுல டிக்கட்...''
 ""நாலு ரூபா தந்து ரெண்டு தரை டிக்கட் எடுத்துத் தர சொன்னோமில்லியா...''
 ""எப்பம்பில தந்திய...'' என்று கேட்டவாறு அவன் விரைவாக தியேட்டருக்குள் சென்றுவிட்டான்.
 நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.
 ஒருவேளை வேறு யாரிடமாவது டிக்கட்டுக்கு ரூபாயக் கொடுத்தேனா...
 அதன் பின்னர் கவுண்டரைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் அவனைப்போல சுருள்முடித் தலையுடனும் கட்டம் போட்ட சட்டையுடனும் தான் எனக்குத் தெரிந்தனர். யாரிடம் காசைக் கொடுத்தேன்..
 சிறிது நேரத்தில் டிக்கட் கவுண்டர் காலியாகி விட்டது. தியேட்டரின் கதவுகள் அடைக்கப்பட்டன. படம் போட்டு விட்டார்கள்.
 நானும் மகேசும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்... மகேசின் முகத்தில் கோபத்தின் சீற்றம் ஏறியது. கண்கள் சிவந்தன.
 ""நீ...தான்... நீ தான்... எனக்கு நாலு ரூபாயும் தரணும்.... '' என்று என்னை நோக்கி விரல் நீட்டினான்.
 எனக்குப் பேச்சு வரவில்லை. சரி... என்பது போல தலையை மெதுவாய் அசைத்தேன்.
 சைக்கிளின் ஞாபகம் வந்தது எனக்கு. சைக்கிள் வைத்திருந்த இடத்திற்கு ஓடினேன். நூறுக்கும் மேல் சைக்கிள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எனது சைக்கிளை ஒருவழியாகக் கண்டு கொண்டேன். அங்கு நின்ற முதியவரிடம் விஷயத்தைச் சொல்ல முடியாமல் திக்கித் திணறியபோது, அவர், ""சின்னப்பயலுவளுக்கு எதுக்கில சினிமா...'' என முணுமுணுத்தவாறு, பெரும் சிரமப்பட்டு சைக்கிளை எடுத்துத் தந்தார். கூடவே சைக்கிள் கட்டணமான 50 காசுகளையும் திருப்பிக் கொடுத்தார்.
 பசியும், ஏமாற்றமும் உடலைத் தளரச்செய்திருந்தது.
 ""போஞ்சி குடிப்பமா மகேசு...'' என்றேன்.
 ""ம்'' தியேட்டரை ஒட்டியிருந்தக் பெட்டிக் கடைக்குச் சென்று,
 ""இரண்டு உப்பு போஞ்சி...'' என்றேன், கையில் இருந்த 50 காசுகளைக் கொடுத்தவாறு.
 "மடக்... மடக்...' என்று போஞ்சியைக் விரைவாகக் குடித்தோம்... கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினேன். மகேசு பின்னால் ஏறிக் கொண்டான்.
 இரண்டு மூன்று நாள்களாகவிட்டது. மகேசிற்கு கொடுப்பதாகச் சொன்ன நான்கு ரூபாய் என் கையில் வரவில்லை. மகேசின் வீடு இருக்கும் சிவன் கோயில் தெரு வழியாக பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து அம்மன் கோயில் தெரு வழியாக சென்று வந்தேன். அப்படியிருந்த போதும் மகேசு வகுப்பின் இடைவேளைகளில் என்னைத் தேடிப் பிடித்து விடுவான்.
 ""நாலு ரூபாய குடு... செந்தில்...'' என்பான்.
 ""ரெண்டு நாள்ல தந்திருவன்...'' என்பேன் நான்.
 ""எத்தன தடவை இப்படி ரெண்டு நாள்ல தந்திருவன்ணு சொல்லுவ... இனி நான் உந்தம்பியிடம் சொல்லியிடுவேன்...'' என்பான்.
 ""தம்பியிடம் சொல்லியிடாதே... அவன் அம்மாவிடம் சொல்லியிடுவான்... அப்புறம் வீட்டுல அடி தான் கிடைக்கும்..'' என்பேன்.
 நான்கு ரூபாயை எப்படிப் புரட்டலாம்... யாரிடம் கடன் வாங்கலாம்... லீவு நாள்ல ரப்பர் தோட்டத்தில கையாள் வேலைக்குப் போகலாமா? என யோசித்து வந்தேன். மகேசு விடாமல் துரத்திக் கொண்டிருந்தான்.
 ஒரு நாள் என்னிடம் வந்தவன்,
 ""இனி உன்னிடம் காசு கேட்க மாட்டேன்...'' என்றான்.
 ""ஏன்...''
 அம்மாவிடம் சொல்லி விட்டேன்...
 ""உண்மையாட்டா.'' எனக்குள் அதிர்ச்சி பரவியது.
 ""ஆமா... நீ எங்க வீட்டுப் பக்கம் வழியாக வந்தால் உன்னைப் பிடித்து உட்கார வைத்து காசை வாங்கி விடுவதாகவும், இல்லாட்டி... உனது சட்டையைக் கழற்றி எடுத்துவிடுவதாகவும் அம்மா சொல்லிச்சு...'' என்றான்.
 நான் நடுங்கி விட்டேன்.
 அவன் அம்மா, வீட்டோடு நடத்தும் விறகுக் கடையில், கடன் சொல்லி விறகு வாங்கிப் போனவர்களிடம் வாய்ச்சண்டைப் போட்டு காசை வாங்குவது பலமுறை பார்த்திருக்கிறேன்.

 அன்று ஞாயிற்றுக்கிழமை சரியாக மாட்டி விட்டேன். மகேசின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
 ""லே... செந்திலு மகேசுக்க வீட்டுக்குப் போய் ரெண்டு கட்டு விறகு வாங்கிட்டு வால...'' அம்மா சொன்னாள்
 ""அம்மா நான் போகல்ல அம்மா.... தம்பிக்கிட்ட சொல்லிவுடு அம்மா...'' அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்தேன்.
 ""அவன் எடுத்துகிட்டுவந்துகிட மாண்டாம்ல.. நீ தான் போ...'' என்றாள். அவள் குரலில் கோபமும் எரிச்சலும் இருந்தது.
 நான் மீண்டும் தயங்கியபடி நின்றபோது ""நீ போகலயிண்ணா இன்று சோறு வைக்கமுடியாது... பட்டினி தான்.... வீட்டில ஒரு துண்டு விறகு கூட இல்ல...'' என்றாள் அடுப்பினடியைக் கிளறிக் காண்பித்தபடி.
 ""சரி போறேன்...'' என்றேன் தலையைக் கவிழ்த்தபடி.
 அம்மா சமையல் அறையில் ஏதோ பெட்டியிலிருந்து நான்கு ரூபாய் சில்லறைக் காசுகளை எடுத்து என் கையில் கொடுத்தாள்.
 ""ரெண்டு கட்டு விறகு என்ன...''
 ""ம்...''
 ""லே.....போட்டிருக்க கிழிஞ்ச நிக்கற மாத்திக்கிட்டு வேற நிக்கறும் சட்டையும் போட்டுகிட்டுப் போ...''
 ""சரி...''
 ""பயலுக்கு என்ன குழப்பமோ கண்றாவியோ.. வேற எங்கயும் போவணுமா... சைக்கிள எடுத்துட்டு இதுக்குமுன்ன பறந்திருப்பான்... '' அம்மா முணுமுணுத்தாள்.
 நான் சமையல் அறையிலிருந்து நகர்ந்து படுக்கை அறைக்கு வந்து, பின்புறத்தில் கீறல் விழுந்திருந்த நிக்கரை கழற்றிவிட்டு வேறு நிக்கர் அணிந்து கொண்டேன். பின்னர், சட்டையைக் கையில் எடுத்த போது, கைகள் லேசாக நடுங்கின மனதில் பயம் சூழந்துவிட்டது. சட்டையை அங்கேயே வீசிவிட்டு, நிக்கர் மட்டும் அணிந்த நிலையில் சைக்கிள் வைக்கப்பட்டிருக்கும் முன்பக்க வராந்தாவிற்கு வந்தேன்.
 மகேசின் அம்மா என்னிடமிருக்கும் நான்கு ரூபாயையும் வாங்கி வைத்து விட்டு விறகு தராமல் விரட்டிவிட்டால்...
 சைக்கிளை வெளியே எடுத்து வந்து மிதிக்கத் தொடங்கினேன்.
 மகேசின் வீடு வந்துவிட்டது. வீட்டின் அருகில் சைக்கிளை ஸ்டான்ட் செய்தேன். வாசலில் நின்று கொண்டிருந்த மகேசு என்னைக் கண்டதும் வீட்டிற்குள் ஓடினான். பின் அவனது அம்மாவோடு வெளியே வந்தான்.
 ""என்னல செந்தில்... இந்தப் பக்கம் இப்ப ஆளையே காணல்ல....'' என்று தொடங்கினார்... மகேசின் அம்மா.
 ""நாலு ரூபாய் ரெண்டு நாள்ல தந்திருவேன்... இப்ப ரெண்டு கட்டு விறகு வாங்க.. வந்தி.........'' என நடுங்கியவாறு சொல்லத் தொடங்கினேன்.
 ""எந்த நாலு ரூபா.... எதுக்குல நடுங்கிய...''
 ""மகேசு சொல்லல்லியா...'' நான் மகேசின் முகத்தைப் பார்த்தேன்.
 மகேசு பம்மியபடி நின்றுகொண்டிருந்தான்.
 ""என்னல பம்மிக்கிட்டு நிக்கிய... எந்த நாலு ரூபா...'' மகேசின் அம்மா அவனைப் பார்த்து சத்தமாய் கேட்டார்.
 மகேசு அவன் அம்மாவிடம் இதுவரை நடந்த சம்பவத்தைச் சொல்லவில்லையென எனக்குப் புரிந்து போனது. எனக்குள் சற்று தெம்பு வந்தது.
 ""நான் சொல்லியேன்...'' என சினிமா பார்க்கப் போய் நாலு ரூபாயை ஏமாந்தக் கதையை அவர்களிடம் சொன்னேன்.
 கதையைக் கேட்டவர், ""அந்த நாசமாப் போனவன் உருப்படுவானா... வீட்டுல சொல்லாம கொள்ளாம படத்துக்குப் போன ஒங்களுக்கு இது தேவைதான்...'' என்றார் ஆவேசமாக..
 எனக்கு அழுகை வருவது போல் இருந்தது.
 பின்னர், அவர் முகத்தில் என் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டதை உணர்ந்து கொண்டதைக் கண்டு, மீண்டும் தொடர்ந்தேன்..
 ""இப்ப மகேசு நாலு ரூபாய எனக்கிட்ட கேட்டுகிட்டே இருக்கியான்... ரெண்டு நாள் தரலாம்மிண்ணு சொன்ன பெறகும் கேட்காம... நீங்க என்னப் பிடிச்சு உக்கார வைச்சு ரூபாய வாங்கி விடுவதாகவும், இல்லாட்டி... சட்டையைக் கழற்றி எடுத்து விடுவதாகவும் சொல்லியான்...''
 ""ப்பூ... இம்புட்டுக்குத்தானா..... இதுக்குத் தான், ஒரு சட்டை கூட போடாம வந்தியாக்கும்....'' அவர் அதிர்ந்து சிரித்தார்...
 ""அப்ப என்னோட நாலு ரூபா... ''மகேசு சற்று தூரத்தில் நின்று சிணுங்கினான்.
 ""அடி....வெறகால... ஒனக்கு நாலு ரூபா நான் தரமாட்டேனால...'' என்று சத்தமிட்டவாறு ஒரு விறகுத் துண்டை எடுத்துக் கொண்டு அவனை பொய்யாக அடிக்கத் துரத்தினார்.
 நான் உற்சாகமாகி விறகுக் கடையிலிருந்து இரண்டு கட்டு விறகுகளை எடுத்து சைக்கிளில் வைக்க முற்பட்டேன்.

 பஸ், பத்மநாபா தியேட்டர் அருகில் வந்திருந்தது. நடத்துநர், ""பத்மநாபா தியேட்டர் டிக்கட் எறங்குங்க'' என்றார். நான் வெளியில் தியேட்டர் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன். தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மரவள்ளிச் செடிகள் நடப்பட்டிருந்தன. இந்த இடம் விற்பனைக்கு என்ற பலகை மதிற்சுவரைத் தாண்டி வெளியே தெரிந்தது.
 ""தியேட்டரை இடிச்சுட்டாங்க இல்லியா...'' நான் எனது இருக்கையின் அருகில் இருந்த இளைஞனிடம் கேட்டேன்.
 ""ஆமா... சார் கொஞ்சம் வருசமா... படம் போடாம மூடிப்போட்டிருந்தாங்க... இப்ப இடிச்சுக்கிட்டு பிளாட் போட்டிருக்காங்க...'' என்றான்.