வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திற்பரப்பு அருவி







திகட்ட திகட்ட






குளிக்கலாம்






திற்பரப்பு அருவியில்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது திற்பரப்பு அருவி. முதன்முதலாக குலசேகரம் கான்வென்ட் பள்ளியில் 1 ம் வகுப்பு படிக்கும் போது தான் அங்கு சுற்றுலா சென்றோம். அப்போதைய பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. அருகில் பிராமாண்டமான கற்களால் எழுப்பப்பட்ட மகாதேவர் கோயிலும், கோயிலுக்கு செல்லும் நடை பாதையில் செதுக்கப்பட்டுள்ள தவளையைப் பிடிக்கத் துடிக்கும் பாம்பு சிற்பமும் ஆச்சரியமாய் இருந்தது. அதன் பிறகு பதின் பருவத்தில் மிதிவண்டியில் அவ்வப்போது அருவி சென்று குளித்து மகிழ்வதுண்டு. அப்போதெல்லாம் அந்த அருவி அரிதாரம் பூசாத அருவியாகவே இருந்தது.
இன்று ஏறக்குறைய ஒரு இந்திய அளவிலான சுற்றுலாத் தலமாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. பூங்காக்களும், சிறார் நீச்சல் குளமும், படகு துறையுமாய் அருவின் சுற்றுப்பகுதிகள் விரிவடைந்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. ஆதிகாலத்தில் இந்த ஆறு தற்போது அருவியாக விழுந்த இடத்தின் வழியாக பாயவில்லை என்பது தான் உண்மை. பிற்காலத்தில் தான் ஆற்றின் போக்கை முழுமையாக திருப்பி உயரமான அருவியாக்கியுள்ளனர். யுகங்களுக்கு முன்னர் இந்த ஆறு பாறைகளின் வழியாய பாய்ந்தோடிய தடங்களை இப்போது காணமுடியும், அவை பார்ப்போரை பரசமூட்டும் நல்ல ஓவியங்கள், அல்லது கவிதைகள் எனலாம்.
தமிழகத்தில் குற்றாலம் அருவி வறண்டாலும், திற்பரப்பு அருவி வறண்டு போவதில்லை. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். நகரத்தின் வெகு அருகில் இருபதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை எளிதில் வந்து செல்லலாம். ஆபத்து என்பது இல்லாத சுற்றுலாத் தலம்.