வியாழன், 9 டிசம்பர், 2010







மறுபடியும் மறக்க முடியாத நாள்...
டி
சம்பர் 7 ம் தேதி நண்பகல், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பலத்த மழையில் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
சன் டிவி ஜெரால்டிடமிருந்து போன் வந்தது. "லாசர், பேச்சிப்பாறையிலிருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தெறந்து விட்டிருக்காங்களாம்". எனது மனதிற்குள்ளும் அந்த எண்ணம் ஏற்பட்டிருந்தது. மழை மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் தினமலர் நண்பர் ஜெயமோகன் திருநந்திக்கரை கோயிலில் வெள்ளம் புகுந்து விட்டதாக போனில் சொன்னார். "உடனடியாக புறப்பட்டு வாருங்கள் இருவரும் அங்கு செல்லலாம்" என்றேன்.
சற்று நேரத்தில் அவரும் வந்துவிட்டார். இருவருமாக திருநந்திக்கரை விரைந்தோம்.
செல்லும் வழியில் திட்ட விளை கிராமம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தை பார்த்தபோது நிலமையை முழுமையாக உணர்ந்து கொண்டோம்.
ஏறக்குறைய இருள் சூழ்ந்து விட்டிருந்தது. நந்தியாறு நிரம்பி நந்தீஸ்வரர் கோயிலுக்குள் வெள்ளம் வேகமாக புகுந்து கொண்டிருந்தது. கோயில் வெள்ளத்தில் மிதந்தது போலவே காணப்பட்டது. அந்த நேரத்திலும் கோயிலில் அர்ச்சகர் பூசை நடத்திக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவரை வெளியே அழைத்து வந்தார்கள்.
பின்னர் ஒருவழியாக புகைப்பட காரரை அழைத்து படம் எடுத்தோம். பின்னர் அவசர அவரசமாக வீடு வந்து அடுத்த நாள் செய்திக்கு படத்துடன் அதனை கணினியின் தட்டிவிட்டேன்.
மழை தொடர்ந்து தீவிரமானது. சற்று நேரத்தில் பேச்சிப்பாறை அருகில் வசிக்கும் அண்ணன் சேவியர் வீட்டிலிருந்து போன் வந்தது. வெள்ளம் வீட்டின் முற்றம் வரை வந்து விட்டதாக சொன்னார். எனது மனக்கண் முன்னால் 1992 நவம்பர் 13 தான் ஓடிக்கொண்டிருந்தது. விமலாவிடமும் அதனை விவரிதேன். நண்பர்கள் ஜெயமோகன், கமலன், பிரதீஸ் ஆகியோரிடமிருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் ஜெரால்டிடமிருந்து அழைப்பு, கலெக்டர் ராஜேந்திர ரத்னூ திருவட்டாரில் முகாம் என்றார்.
இரவு தூக்கம் வரவில்லை. அதிகாலை 3 மணிக்கு நண்பர் மைக்கேல் ராஜிடமிருந்து அழைப்பு, லாசர் மழை நிற்கவில்லை. பலத்த இடி வெட்டும் உள்ளது என்றார்.
காலையில் எழுந்து முதல் வேலையாக மழைக் கோட்டை அணிந்து கொண்டு திற்பரப்பு அருவிக்கு விரைந்தேன். நிலைமையின் தீவிரம் மேலும் உறைத்தது. அப்புறம் களியல், பின் தொடர்ச்சியாக திருவட்டார், தேமானூர், மூவாற்றுமுகம், பின்னர் பேச்சிப்பாறை என கொட்டும் மழையில் ஒரே ஓட்டம் தான். எங்கும் வெள்ளத்தின் ருத்ர தாண்டவம். இடையில் மோட்டார் சைக்கிள் வேறு பல இடங்களில் மக்கர் செய்தது. ஒரு வழியாக சம்வங்களை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்து கணினி முன் அமர்ந்தேன்.....
றக்க முடியாத நாள்கள்... . ஆம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளது. 1992 நவம்பர் 13 க்கு பிறகு 2010 டிசம்பர் 7, 8 தேதிகளில்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மறுகால் வெள்ளமும், இதர பகுதிகளிலிருந்து புறப்பட்டு வந்த வெள்ளமும் ஆற்றில் பிரவாகம் எடுத்து ஓடியது.
உண்மையில் 1992 ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு இப்போது இல்லை. ஊடகங்கள் வழியாகவும், இதர தகவல் தொடர்பு கருவிகள் வழியாகவும் கிடைத்த தகவல்கள் மக்களை முன்னெச்சரிக்கையாக வைத்து விட்டன. எனினும் ஆறுகளின் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை இந்த வெள்ளம் பாதித்து விட்டது. அவர்களின் உடமைகளை வெள்ளம் களவாடி விட்டது. அது போல் நெல் வயல்களையும் மழை வெள்ளம் பதம் பார்தது விட்டது.
ஆற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்படும் போதும், தண்ணீர் பாய்ந்து செல்லும் தடங்கள் தடுக்கப்படும் போதும் அரசு அதிகாரிகள் வேடி்க்கை பார்ப்பதைத் தவிர வெறென்ன செய்வார்கள் ?.
மறுபடியும் வெள்ளம் நமக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நீ வருவாய் என..


அறையில்
முடங்கிக் கிடக்கிறது
இந்தப் பகல்.

நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.

முதலில்
பேப்பர்காரன் வந்தான்
அப்புறம்
தபால் காரன்.

இன்னும்
சோப்பு விற்பவன்
பீனாயில் விற்பவன்
டெட்டால் விற்பவன்
வரக்கூடும்.

அலைபேசி
அதிசயமாய்
உறங்கிக்கிடக்கிறது.

சாரலாய் தொடங்கி
பேயாய் மாறிப்போன
மழை போலிருந்தது
உனது காமம்.

நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.

நீ
வரலாம் - அல்லது
இந்நேரம்
வேறு யாருக்கேனும்
புதிதாய்
எஸ்எம்எஸ்களை
விட்டுக் கொண்டிருக்கலாம்
.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திற்பரப்பு அருவி







திகட்ட திகட்ட






குளிக்கலாம்






திற்பரப்பு அருவியில்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது திற்பரப்பு அருவி. முதன்முதலாக குலசேகரம் கான்வென்ட் பள்ளியில் 1 ம் வகுப்பு படிக்கும் போது தான் அங்கு சுற்றுலா சென்றோம். அப்போதைய பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. அருகில் பிராமாண்டமான கற்களால் எழுப்பப்பட்ட மகாதேவர் கோயிலும், கோயிலுக்கு செல்லும் நடை பாதையில் செதுக்கப்பட்டுள்ள தவளையைப் பிடிக்கத் துடிக்கும் பாம்பு சிற்பமும் ஆச்சரியமாய் இருந்தது. அதன் பிறகு பதின் பருவத்தில் மிதிவண்டியில் அவ்வப்போது அருவி சென்று குளித்து மகிழ்வதுண்டு. அப்போதெல்லாம் அந்த அருவி அரிதாரம் பூசாத அருவியாகவே இருந்தது.
இன்று ஏறக்குறைய ஒரு இந்திய அளவிலான சுற்றுலாத் தலமாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. பூங்காக்களும், சிறார் நீச்சல் குளமும், படகு துறையுமாய் அருவின் சுற்றுப்பகுதிகள் விரிவடைந்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. ஆதிகாலத்தில் இந்த ஆறு தற்போது அருவியாக விழுந்த இடத்தின் வழியாக பாயவில்லை என்பது தான் உண்மை. பிற்காலத்தில் தான் ஆற்றின் போக்கை முழுமையாக திருப்பி உயரமான அருவியாக்கியுள்ளனர். யுகங்களுக்கு முன்னர் இந்த ஆறு பாறைகளின் வழியாய பாய்ந்தோடிய தடங்களை இப்போது காணமுடியும், அவை பார்ப்போரை பரசமூட்டும் நல்ல ஓவியங்கள், அல்லது கவிதைகள் எனலாம்.
தமிழகத்தில் குற்றாலம் அருவி வறண்டாலும், திற்பரப்பு அருவி வறண்டு போவதில்லை. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். நகரத்தின் வெகு அருகில் இருபதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை எளிதில் வந்து செல்லலாம். ஆபத்து என்பது இல்லாத சுற்றுலாத் தலம்.

திங்கள், 24 மே, 2010

லாசர் ஜோசப் கவிதை




ஆன்லைனில் ஆடுகள் வளர்க்கலாம்

ஏ... !
எதிர்காலச் சந்ததியினரே
எதை விட்டுச் செல்வோம்
உங்களுக்காக....

அதோ
பள்ளத்தாக்குகளில் குதித்து
பேச்சியிடம் கதை பேசிவரும்
கோதை நதியையா...

அகிலும், தேக்கும்
அழகிய
சந்தனங்களும் கொண்ட
அசம்பு வனத்தையா...

மழை மேகங்கள்
தழுவிச் செல்லும்
தாடகை மலையையா...

தண்ணீருக்கு மார்பு காட்டி
படுத்துக் கிடக்கும்
திற்பரப்பு பாறைகளையா...

கன்னியும், கும்பமுமாய்
இரண்டு போகம்
விளையும்
நாஞ்சில் வயல்களையா....

ஆடுகள்
குட்டிகளோடு
துள்ளி விளையாடும்
பசும் புல் வெளிகளையா...

எதை விட்டுச் செல்வோம்
சந்ததியினரே
உங்களுக்காக...?

துகிலுரியப்பட்ட
பூமியைத் தவிர
வேறென்ன இருக்கும்
விட்டுச் செல்வதற்கு...?


சபிக்காதாதீர்
சந்ததியினரே
எங்கள் வயிறு பெரிது
பசி பெரிது

எனினும் உங்களுக்கான
கணினிகளை சேமித்து
வைத்திருக்கிறோம்

நீங்களும் தான்
ஆன்லைனில்
ஆடுகள் வளர்க்கலாம்...



சனி, 20 மார்ச், 2010

குருசுமலை







சிலுவையை சுமக்கும் மலை

அந்த மலை சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது. சிலுவை என்ற சொல் குருசு என்றும் அறியப்படுகிறது. அதனால் அந்த மலை குருசு மலை என்று அழைக்கப்படுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவால் சிலுவை புனிதம் பெற்றது. அந்த சிலுவையின் அடிபணிந்து வணங்கினால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும், வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான மக்களை அதன் பாதை நோக்கி அழைத்துச் செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. பயணம் அழகிய சிற்றாறு 2 அணையின் கரைப்பகுதி வழியாக சென்றால் கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை சந்திப்பு வரும், அதிலிருந்து 2 கி.மீ. தூரம் குருசு மலை அடிவாரம்.
ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை. அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும். மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது
அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சார்பில் தவக்கால நாள்களின் இறுதிப் பகுதியில் இங்கு திருப்பயணம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குச் செல்கின்றனர்.

சனி, 13 மார்ச், 2010

நவீன ஓவியங்கள்







எல்லைகளற்ற நவீன ஓவியங்கள்

அந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு காலைப் பொழுதில் அவரது வீட்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஓவியர் வாமணனை அதற்கு முன் நான் சந்தித்திருக்கவில்லை. அவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாய் எனக்குக் காட்டினார். எனக்குள் ஏற்பட்ட பரவசம் அளவிடமுடியாதாய் இருந்தது. எத்தனை நேர்த்தி... எத்தனை நுட்பம்... அன்றைய நாளிலிருந்து அவரைக் கொண்டாடத் தொடங்கினேன்.
ஓவியர் வாமணன் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வெண்டலிகோடு கிராமத்தை சேர்ந்தவர்.
ஒரு பள்ளி ஆசிரியராய் இருந்து பணி ஓய்வுக்குப் பின் அவர் நவீன ஓவிய உலகிற்குள் வசித்து வருகிறார். நவீன ஓவியங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்ற அவரது வார்த்தைகள் நிஜமாய்த் தான் இருக்கின்றது. ஒரு பூவைச் சுற்றிச் சுற்றி வந்தமரும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் அவரது தூரிகைகளில் நவீன ஓவியங்கள் வந்தமர்ந்து கொண்டிருக்கின்றன.
அவரது ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. உயிரோட்டமான அந்த ஓவியங்கள் இறக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கின்றன.. விரைவில் அவை உலகின் கதவுகளைத் தட்டும்.
பிக்காஸோக்கள். மைக்கேலெஞ்சலோக்கள்... புதிதாய் பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

கவிஞர் சந்திரகலா


கவிஞர் சந்திரகலா

சந்திரகலா நான் கொண்டாடும் கவிஞர். இலக்கியத்தில் இடம் பிடித்த அதங்கோடு அவர் பிறந்த மண். வாரமலர் இதழின் பின் பக்க அட்டைகளை அவரது கவிதைகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. என் வயதுக்கு சற்று்க குறைவாகத் தான் இருக்கும் அவரது வயது. கன்னியாகுமரி மாவட்டப் பிரஸ் கிளப் தான் முதலில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எனக்கு அளித்தது.
வசீகரிக்கும் வார்த்தைகளால் நேர்த்தியாய் கவிதை நெய்யும் வித்தை அவருகே உரியது. சந்திரகலாவின் பெயர் இல்லாமல் தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிஞர்களின் பட்டியலைத் தயாரித்து விட முடியாது. அவரது கவிதைகளைப் படிக்கும்போதல்லாம் பரவசம் அடைகிறேன்.
அந்தி வானம், அலைகடல், அழகான பெண்கள், சந்திரகலாவின் கவிதை......
1990 களில் வாரமலர் இதழில் வெளிவந்த சந்திரகலாவின் ஒரு கவிதையை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து அழகு பார்த்தேன். காலம் கடந்து நிற்கும் அந்தக் கவிதையை நீங்களும் படியுங்களேன்....

தலைமை நாற்காலி

மருமகளே
இது உன்
ராஜ சபை.

புகுந்த வீடு எப்படியோ
என்கிற
புதுக்குழப்பம் வேண்டாம்
தாய் வீட்டில் அனுபவித்த
சுதந்திரக் காற்றை
நீ
இங்கேயும் சுவாசிக்கலாம்.

நான் உனக்கு
மாமியாரல்ல
மாற்றாந்தாயல்ல
இன்னொரு தாய்
இரண்டாவது தாய்.

மகளே
நானும் ஒரு நாள்
மருமகளாக இருந்தவள் தான்
என்பதை
மறந்துவிடவில்லை.
பயப்படாதே
என் வீட்டு ஸ்டவுக்கு
எரியத் தெரியும்
எரிக்கத் தெரியாது.

என் மகனுக்கொரு
பூரணமான வாழ்க்கை மட்டும்
நோக்கமாக இருந்ததால் தான்
மயிலே- உன்னை
மருமகளாக்கி இருக்கிறேன்.
மூலைக்கு மூலை
நடப்பது போல்
வியாபார நோக்கத்தோடு அல்ல.

இனி என்
இருபத்தோரு வயது குழந்தையின்
நித்திரையும்
விழிப்பும்
நீ
சம்மந்தப்பட்டது.

மகளே
என் வீட்டுக் கவுரவம்
உன் இதயத்திலும்
என் வீட்டுச் சாவி
உன் இடுப்பிலும்
இருக்க வேண்டுமென்பது தான்
இந்த
அன்னையின் உள்ளத்தின்
ஆடம்பரமில்லாத ஆசை.

வா- மகளே
வந்து உட்கார்
இது-
இது வரை
நான் வகித்து வந்த
தலைமை நாற்காலி
இனி மேல்-
எனக்கு
இரு்க்கவே இரு்க்கிறது
சாய்வு நாற்காலி...

புதன், 27 ஜனவரி, 2010

கவிஞர் வேங்கடகிருஷ்ணன்


கவிஞர் வேங்கடகிருஷ்ணன்

அவருக்கு சொந்த ஊரு மதுரை. 1990 லிருந்து பெரும் பொழுது நான் அவரோடு செலவிட்டிருக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் அறிஞர்கள் என அவர் அறியாதது எதுவுமில்லை. இலக்கியம் சார்ந்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை நான் கேள்விப் படும் முன் அவர் படித்திருப்பார். ஆன்மீகம், தியானம், நாத்திகம் எல்லாம் அவர் அறிந்தது. மகான்கள், ஞானிகள், மதங்கள் குறித்த விபரங்களை அவர் விரல் நுனிகள் வைத்திருக்கும்.
எப்பொருளில் கவிதை அல்லது கட்டுரை எழுதிக் கேட்டாலும். உடனே அதனை தயார் செய்து தரும் ஆற்றல் அவரிடம் நிரம்பிக் கிடக்கிறது.
அவரிடமிருந்து தமிழ், தமிழர்கள், ஆன்மீக மகான்கள் குறித்து ஏராளம் கற்றுக் கொண்டேன். நான் படித்த அதிக புத்தங்கள் அவர் மூலம் எனக்குக் கிடத்தவை. நானும் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குகிறேன் என்றால் அதற்கு அவர் காரணம். எனது முதல் வாசகர். நல்ல ரசிகர்.
அவருடன் நட்பு ஏற்பட்ட தொடக்க நாள்களின் அவர் எழுதிய கவிதைகளை எனது நோட்டுகளில் எழுதி வைத்து அழகு பார்ப்பேன். அப்படித்தான்... 1991 ம் வருடம் கல்கி வார இதழ் ஒரு கவிதைப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்ற அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. நான் எனது நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தேன். அந்த கவிதையைப் படித்துப் பாருங்கள்.

ஞான வெளியில்...

ஒரு தீப்பந்தம்
அதைச் சுழற்றினால்
அற்புத
தீச்சுடர் வளையம்.

எனது
யதார்த்த சொரூபம்
எனக்குத் தெரியாததால்
வாழ்க்கையைச்
சுழல விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்.

மூலத்தில்
முகிழ்ந்து எழுந்த
நானென்னும் ஆணவ
அலங்கோல பொம்மைக்கு
ஆன்ம தரிசனம்
எப்போது

மூல மொழியைப்
படிக்கத் தெரியாத
வேட்கையில்
மொழிப் பெயர்பைப்
படிக்கும் ஆனந்தம்.

உள்ளதை
உள்ளபடி உணரும்
திண்ணம் இல்லாததினால்
ஓடும் மனத்தின் மீது
உல்லாசப் பயணம்
அற்ப சுகம்.

பூமியின் பரப்பளவை விட
எனது
ஆசையின் பரப்பளவு
அதிகம் என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தால்
இரண்டடியில் அளந்து விட்டு
மூன்றாமடிக்கு
என்னை அளந்திருப்பான்.

நிறைவேறாத
ஆசைகள்
கனவாகச் சஞ்சரி்ககும்
கொஞ்சம்
கற்பனை இருக்குமெனில்
கவிதையாய் சஞ்சரி்க்கும்.

ஆன்மாவின்
நெடிய யாத்திரையில்
எண்ணிலாக் காட்சிகள்

இதய வானில்
இன்ப முகில்கள்
தாலாட்டும் போது
கால முட்களின்
கவலைக் கீறல்கள்
பள்ளி ஆசிரியர்
தேர்வுத் தாள் திருத்தும்
பணிக்கையாய் விழுகிறது.

தன்னைத் தானே
உணராததால்
தலை கால் தெரியாத
தத்துவக் குப்பைகள்
சேமிக்கப்படுகின்றன.

சிருஷ்டிக்குள்ளே நடக்கும்
சிலம்பாட்டத்தில் தான்
எத்தனை மகிழ்ச்சி.

வெற்றி
மனிதனை விழுங்குகிறது
தோல்வி
சிந்திக்க வைக்கிறது.

இரண்டையும்
கண்டு
நகைக்கத் தெரிந்தால்
ஞான வெளியில்
நாட்டியம் ஆடலாம்...

சனி, 23 ஜனவரி, 2010

கவிதைகள்


காதலனுக்கு ஒரு நினைவூட்டல்

அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும் அழியாமல் இருக்கலாம்.

நினைவிருக்கிறதா ?
ஒரு- இலையுதிர் காலத்திற்குப் பின்
அந்தக் காடுகளில்
தங்க நிறத்தில்
தளிரிலைகள்
துளிர்க்கத் துவங்கியபோது
நம் காதலும் துளிர்த்தது.

தளிரிலைக் காம்புகளி்ல்
சுரக்கும் தேனாய்
நம் காதலும் கனிந்தது.

அது ஒரு மார்ச் மாதம்
அப்போது அந்த மரங்கள்
பூக்களை சுமக்கத் துவங்கியது.

பூக்களின் வாசமும்
நம் காதலும்
ஊருக்குள் வீசத் தொடங்கியது.

ஒரு ஜூன் மாதத்தில்
வெடித்துச் சிதறும்-அதன்
காய்கள் போல்
நாம்-கலகலவென
பேசி சிரித்து மகிழ்ந்திருந்தோம்.

திருமணம்-குறித்து
நான் பேசிய போதெல்லாம்
நீ- அந்த மரத்தின்
பிசின் போல்
நாள்களை
இழுத்துக் கொண்டே போனாய்...

அப்புறம்
ஓர் நாள்-அது
அறுந்து விட்டது.

அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும்......

(ஹிவியா பிரசீலியன்ஸ்-ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர்)

கவிதைகள்

கொஞ்சம் தண்ணீர்... நிறைய...


எப்போதாவது
வெடித்து வரும்
பால்ய கால எண்ணங்களில்
இதுவும் ஒன்றாகி விட்டது.

பள்ளிக்கூட விடுமுறையென்றால்
யுத்தம் கால்வாயோடு தான்-
கால்வாய் தீப்பிடித்துக் கொள்ளும்.

குண்டன் குமரேஷன்
குதிக்கும் போது
தெறி்க்கும் தண்ணீர்
வானம் தொடும்.

தவளை நீச்சலிடும்
பெற்றி்க் கோட் குமரிகளின்
முதுக்குப் புறங்களில்-
காற்றின் சில்மிஷத்தில்
பலூன்கள் பூக்கும்.

தொட்டு விளையாடுகையில்
துணி துவைக்கும்
மாமிகளின் இடையில் புகுந்து ஓடி
அறுப்புக் கேட்பது அலாதியானது.

டவுசருக்கு விடை கொடுத்து
ஆடும் 'அது'களோடு
வெட்டிப் போட்ட வாழை மரம்
சுமந்து வந்து
பயணம் போகும் பையன்களிடம்
மாலுமிக் கனவுகள்.

மான்களுக்கு
தூண்டில் போடும் வயதில்
மீன்களுக்கு
தூண்டில் போடும் வாலிபர்களின்
வால் பிடித்து நிற்கும்
சிறார் கூட்டம்.

இப்போதெல்லாம்
தொலைக்காட்சி்ப் பெட்டி வயர்களில்
சிக்கிக் கிடக்கிறார்கள்
சிறார்கள்.

கால்வாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கொஞ்சம் தண்ணீரும்
நிறைய சாக்கடையுமாய்....

பத்து கட்டளைகள்


பத்து கட்டளைகள்

ஒரே வாரிசாக இரு
அதற்கு மேலென்றால்
மம்மியை சபி.

தாய் மொழி தவிர்.

செல்வச் செழிப்பிற்கு
டாடியை புகழ்.

பெண்ணென்றால்
முக்கால் நிர்வாணம் கொள்.

ஒரு முறையேனும்
கருக்கலை.

இணையை
வெளிநாட்டில் கொள்.

நேரமிருந்தால்
பிள்ளை பெறு.

ஊரிலுள்ள
மம்மிக்கும் டாடிக்கும்
முகம் காட்டாதே
பணம் காட்டு.

முடிந்தால்
ஹோமில் சேர்த்து விடு.

கடைசியில்
அனாதையாய் சாகவிடு.

சனி, 16 ஜனவரி, 2010

குழந்தைகளை கிழிக்கும் புத்தகங்கள்

குழந்தைகளைக் கிழிக்கும் புத்தகங்கள்
  • ஓ...
    குழந்தைகளே..
    அறிவீர்களா
    எனது பள்ளி நாட்களை.. ?
  • இறுக்கிக் கட்டிய நிக்கரும்
    ஊக்குக் குத்திய சட்டையுமாய்
    அழகான நாட்கள் அவை.
  • மூலை உடைந்த சிலேட்டும்
    அட்டைக் கிழிந்த தமிழ்ப் புத்தகமும்
    அதிக பட்ச சுமைகள்.
  • அ.. ஆ...
    உயிர் எழுத்துக்கள் படித்து விட்டாலே
    உலகம் படித்த சந்தோஷம்.
  • நவரைப் பச்சிலைகள்
    அழிப்பான்களாகும்.
    மயில் பீலிகள்
    புத்தக இடுக்குகளில்
    குட்டி போடும்.
  • மழை நாட்களில்
    சிலேட்டு குடையாவதால்
    டீச்சர் போட்ட நட்சத்திரம்
    அம்மாவின் கண் படாமலேயே
    அழிந்து போகும்.
  • மாலைப் பொழுதுகள்
    டயர் வண்டியோ
    நொங்கு வண்டியோ
    உருட்டுவதில்
    ஓடிச் செல்லும்.
  • ஓ...
    குழந்தைகளே
    அறிந்தீர்களா ...
    எனது பள்ளி நாட்களை ..?
  • இப்போதெல்லாம்
    எனது ஐன்ஸ்டீன் கனவுகள்
    உங்கள் முதுகில் சுமத்தப்படுகிறது.
  • உங்களின் பொம்மைகளைப் பறித்து விட்டு
    புத்தக் கட்டுகள் தந்து விட்டேன்.
  • நீங்களும் தான்
    சுமை சுமந்து
    சோர்ந்து போயிருக்கிறீர்கள்.
    காலையில் மாலையில் இரவினில்
    ஓயாது உங்களை
    புத்தகங்கள்
    துரத்திக் கொண்டிரு்க்கின்றன.
  • புத்தகங்கள் கிழித்த
    காயங்களுடனேயே தூங்கி விடுகிறீர்கள்
    ஒவ்வொரு நாளும்....