தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனது ஊர். நானொரு சமூக ஆர்வமுள்ள பத்திரிகையாளன். மனித நேயமும் மரம் நடுதலும் எனக்குப் பிடித்தவை. வாசிப்பதும், எழுதுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது. எனது வழிகளில் நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். அழகியப் பூக்கள் பூக்கின்றன.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
ஊருக்குப் போன உலக மயம்
அந்த உலகம்
புதியதாய் இருந்தது.
அலுமினியப் பறவைகள்
எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன.
அழகில்லாதவர்கள்
அங்கில்லை.
ஒப்பனையும்
கற்பனையும் கொண்டவர்களுக்கே
அங்கு குடியுரிமை.
நுகராதவன்
சுவாசிக்கலாகாது
இது சட்டம்.
எனது-மூளைக்குள்ளும்
கணினி இடம் பெயர்ந்திருந்தது
நரம்புகளில் - மின்சாரம்.
அந்த மரம்
அங்கு நின்றது
உலுக்கிய போது - அது
கரன்சிகளை உதிர்த்தது.
என் உறவு யாது
எது என் மொழி
எனது தேசம் எது
எல்லாம் மறந்தெனக்கு.
உடல் மொழியும்
ஊடல் மொழியும் வசப்பட்டது.
நுகர்வின் மயக்கத்தில்
பேதமற்றுக் கிடந்தன
பகலும்-இரவும்.
உரசிய உதடுகளும்
ஓங்கியக் கோப்பைகளுமாய்
துள்ளிக் குதித்ததில்
தலையில் மோதியது வானம்.
ஒரு நாள்
உலுக்கிய போது
கரன்சி மரம்
கற்களை உதிர்த்தது.
மெல்லனவாய்
நினைவில் வந்ததது-
எனது தேசம்
எனது மொழி
எனது தாய்.
முதியோர் இல்லத்தில்
முனகிக் கொண்டிருக்கும்
தாய்க்கு
என்னை நினைவில்லை.
உண்மையில் நான்தான்
தாயை
எப்போதோ மறந்திருக்கிறேன்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)