செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஊருக்குப் போன உலக மயம்



அந்த உலகம்
புதியதாய் இருந்தது.

அலுமினியப் பறவைகள்
எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன.

அழகில்லாதவர்கள்
அங்கில்லை.

ஒப்பனையும்
கற்பனையும் கொண்டவர்களுக்கே
அங்கு குடியுரிமை.

நுகராதவன்
சுவாசிக்கலாகாது
இது சட்டம்.

எனது-மூளைக்குள்ளும்
கணினி இடம் பெயர்ந்திருந்தது
நரம்புகளில் - மின்சாரம்.

அந்த மரம்
அங்கு நின்றது
உலுக்கிய போது - அது
கரன்சிகளை உதிர்த்தது.

என் உறவு யாது
எது என் மொழி
எனது தேசம் எது
எல்லாம் மறந்தெனக்கு.

உடல் மொழியும்
ஊடல் மொழியும் வசப்பட்டது.

நுகர்வின் மயக்கத்தில்
பேதமற்றுக் கிடந்தன
பகலும்-இரவும்.

உரசிய உதடுகளும்
ஓங்கியக் கோப்பைகளுமாய்
துள்ளிக் குதித்ததில்
தலையில் மோதியது வானம்.

ஒரு நாள்
உலுக்கிய போது
கரன்சி மரம்
கற்களை உதிர்த்தது.

மெல்லனவாய்
நினைவில் வந்ததது-
எனது தேசம்
எனது மொழி
எனது தாய்.

முதியோர் இல்லத்தில்
முனகிக் கொண்டிருக்கும்
தாய்க்கு
என்னை நினைவில்லை.

உண்மையில் நான்தான்
தாயை
எப்போதோ மறந்திருக்கிறேன்....