வியாழன், 14 பிப்ரவரி, 2013

மனோ ரஞ்சன் தாஸ்

அறிவாயா... மனோ
உனது மரணம்
இத்தனை இதயங்களை
கலங்க வைக்குமென்று

அறிவாயா... மனோ
உனது மரணத்தால்
இத்தனை இதயங்கள்
கண்ணீர் வடிக்குமென்று..


பியோதர் தஸ்தயெவ்ஸ்கியையும்
கலீல் ஜிப்ரானையும்
பாப்லோ நெரூடாவையும்
நம் மண்ணில்  
நடமாடவிட்டவன் நீ..

சுதந்திர
பாலஸ்தீனமும்
தமிழீழமும்
உனது பேச்சுப் பந்தியில்
பரிமாறப்படாத நாளேது ?

இந்திய விடுதலை வரலாற்றில்
மறைக்கப்பட்ட வீரர்கள் மீது
உனக்கு ரகசிய
காதல் இருந்தே....

குலசேகரத்தின்
ஒரே கவிஞன் நீ..
உயிர் கசியும் கவிதைகளை
உன்னால் மட்டுமே எழுத முடியும்..

இந்த
அழுக்குச் சமூகத்தின்
அவலங்களுக்கெதிரான
அறைகூவலை
நீ விடுத்துக் கொண்டேயிருந்தாய்..

அரங்குகளில்
உயிருள்ள சொற்களை
உன்னால் மட்டுமே
உலவ விடமுடியும்...

உன் மன அழகைச் சொல்லும்  மனோ..
உன் கையெழுத்து.

பூவுலகின் நண்பன் நீ...
நம் பகுதியில்
மலைகள் உடைக்கப்பட்ட போது
மனம் கலங்கினாய்..
பாறைகள் உடைக்கப்பட்டபோது
பதறித் துடித்தாய்...

செடிகளின் ஸ்னேகிதன் நீ..
உனது செய்கைகளுக்கு
செடிகள் தலையாட்டும்
பூக்கள் புதுப் பிறப்பு எய்தும்..

என்ன செய்வது-ஒரு
பொன்னுலகம் காண பூபாளமிட்ட
உன்னோடு 
பொருளாதாரம் பூசல் செய்துவிட்டது.

அறிவாய்.. மனோ
அறிவாய்...
உனது மரணம்
இத்தனை இதயங்களை
கலங்க வைக்குமென்று...

ஆம். மனோ..
வாழும் போது
மானுட நேசம் கொண்டு வாழ்ந்தவன் நீ...
மனிதனாக வாழ்ந்தவன் நீ..