வியாழன், 23 அக்டோபர், 2014


குமரி ஆதவன் கவிதை

1.
 செருப்பைக் கழற்றி விட்டு
கோயிலுக்குள் நுழைந்த பாம்பு
வெளியில் வந்து
செருப்பை அணிந்ததும்
படமெடுத்தாடுகிறது.




கல்லறையில் காயப்போட்டேன்
சீக்கிரமாய் உலர்ந்தது
என் கர்வம்

திங்கள், 20 அக்டோபர், 2014

கொலை வெட்டு


சிறுகதை:





கொலை வெட்டு


லாசர் ஜோசப்




ஸ்பெட்டாஸ் கூரையின் வெக்கையை மின் விசிறி அதிகமாய் கீழே இறக்கிக் கொண்டிருந்தது. மறுபடியும் புரண்டு படுத்தாள் கமலாவதி. தூக்கம் பிடிபடவில்லை. எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வரலாமென்று யோசித்தாள். அதற்காக விளக்கைப் போடவேண்டும், அப்போது அருகில் படுத்துக் கிடக்கும் தனது மகள்கள் விழித்துக் கொள்ளக் கூடும், கூடவே நடு அறையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் தூக்கம் கலைந்து "இன்னும் ஒறக்கம் வரலியா" என கத்தக்கூடும் என எண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு வரும் யோசனையை விட்டுவிட்டு மீண்டும் புரண்டு படுத்தாள்.

ஆரணிவிளை சிஎஸ்ஐ ஆலய எலக்ரானிக் மணி மறுபடியும் ஒரு இசையை ஒலித்து விட்டு இரண்டு முறை அடித்துக் கொண்டது. பின் "கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும். சங்கீதம் 17: 8" என்ற வேத வசனத்தையும் சொல்லி அடங்கியது. எத்தனையோ முறை கேட்ட வசனம் தான் அது. ஒவ்வொரு முறையும் மனதிற்குள் ஆறுதலை விதைத்துவிட்டுச் செல்லும் வசனம். இந்த முறை அந்த வசனத்திலிருந்து ஆறுதலைப் பெற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாதவளாகவே இருந்தாள் அவள். நெஞ்சின் படபடப்பு அதிகரித்தது. மூச்சுக் காற்று வெப்பமாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

"ஓய் கேட்டீரா..... இப்ப உள்ள நிலையில இருநூறு மரங்களுக்கும் 3 லட்சம் தான் கிட்டும், ரப்பர் ஷீட் வெல கொறஞ்சுங்கொண்டு போறது தெரியுமில்லியா, ரப்பர் தடிக்கும் அந்த கதிதான்..." ஒவ்வொரு ரப்பர் மரங்களின் மூட்டிலும் வந்து மரங்களின் பருமனையும் உயரத்தையும் பார்த்தவாறு காலையில் வந்திருந்த ரப்பர் மர தரகன் அவற்றிற்கு விலை சொன்னது கமலாவதியின் கண்களிலிருந்து இன்னும் அகலவில்லை. அந்த தரகன் ஏற்கனவே வந்த தரகன்கள் கூறிய மூன்றரை லட்சம், மூன்று லட்சத்தித்தி இருபத்தைந்தாயிரம்.. என்பதை விட குறைவாக மூன்று லட்சம் என்று விலை சொன்னது அவளை கதிகலங்கச் செய்துவிட்டது. கழுத்திலிருந்து அடகு கடைக்குப் போன 7 பவுன் தங்கச் சங்கிலியும், அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் மகள்களையும் நினைத்து கண்ணீர் முட்டியது அவளுக்கு.

"கொலைவெட்டிற்கு மரங்களை விலைக்குத் தந்திருந்த சங்கரன்விளை தாமஸிடம் நஷ்டத்தைச் சொல்லி கொடுத்தப் பணத்தில் கொஞ்சத்த திருப்பிக் கேட்டுப்பாம்பமா ?" என்று கமலாவதி அவள் கணவனிடம் சொன்னபோது அவன் "அதெல்லாம் நடக்காத கத... நான் ரெண்டு தடவ கேட்டுப் பார்த்தாச்சு... அவன் மொகம் கொடுத்து பேசல... அந்த ஆளும் மேற்குவிளை செல்லப்பனுக்க மரங்களை கொல வெட்டுக்கு எடுத்து 25 லட்சம் ரூபாய் பூந்தி நிக்கியாரு... எல்லாம் நம்ம தலையெழுத்து வாறது போல வரட்டும்" என்று தனது வருத்தத்தை மறைத்துவிட்டு அவளிடம் ஆறுதல் வார்த்தை சொன்னான்.

"ஒரு தடவை கூட கேட்டுப்பார்த்தாதான் என்ன... ?" என்று அவள் அவனிடம் திரும்பத் திரும்ப சொன்னபோது. கூடுதல் லாபம் கெடச்சா மட்டும் நம்ம திருப்பிக் குடுத்திருவமா... நஷ்டம் வந்தா அனுபவிச்சுதான் ஆகணும். யாவாரம் போல இல்லியா... இதுவும்... அதுமில்லாத.. இப்ப ஆருக்கு மனசாட்சி இருக்கு... அவனுவயெல்லாம் வலிய ஆளுவ... நம்மளயெல்லாம் புழு போல பாப்பானுவ... நான் வரல்ல...நீ வேணுமிண்ணா போய் கேட்டுப்பாரு" என்று சொன்னது அவள் மனத்திரையில் ஓடியது.

கமலாவதி மறுபடியும் புரண்டு படுத்தாள். 'காலையில மொத வேலையா சங்கரன்விளை தாமஸ் வீட்டிற்குச் சென்று அழுது... ஆர்ப்பாட்டம் பண்ணியாவது கொடுத்த பணத்திலிருந்து நஷ்டம் வரக்கூடிய தொகையை திரும்பக் கேட்கணும்....' என்று தீர்மானித்துக் கொண்டாள். சிஎஸ்ஐ கோயில் மணி மறுபடியும் அடித்து விட்டு "நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங்கீதம் 33:20" என்றது.

மலாவதி ஆரல்வாய்மொழிக்காரி. கல்லியாணத்திற்கு முன்பு வரை அவளுக்கு ரப்பர் மரம் என்றால் என்னவென்று தெரியாது. பழங்களை போல ரப்பரும் மரத்தில் காய்க்கும் என்றே அவள் நினைத்து வைத்திருந்தாள். கல்லியாணத்திற்கு பொண்ணு பார்க்கப் வந்த செபாஸ்டின் குடும்பத்தினர் மாப்பிள்ளைக்கு ரப்பர் தோட்டத்தில பால்வெட்டு வேல.. என்று சொன்ன போது அவளுக்கு புரியவில்லை... "எதுக்கு பால வெட்றாங்களாம்...?" என்று அவள் அம்மாவிடம் கேட்டாள்.

ஆரல்வாய்மொழிகாரி..... குலசேகரம் ஆரணிவிளை வாசியான பிறகு அதுவும் ரப்பர் பால்வெட்டுக்காரன் செபாஸ்டினுக்கு பொண்டாட்டியான பிறகு ரப்பருண்ணா எல்லாம் அவளுக்கு அத்துப்படியாகிவிட்டது. கல்லியாணமான புதுசில செபாஸ்டின் திருநந்திக்கரையிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் பால்வெட்டிக் கொண்டிருந்தான். வேலைமுடிந்து மதியம் வீட்டிற்கு வரும் அவனின் உடலிருந்தும், உடையிலிருந்தும், கப்புண்ணு வரும் ரப்பர் நாற்றம்... அவளுக்கு வாந்தி வருவது போல இருக்கும். போகப்போக அந்த நாற்றம் அவளுக்குப் பழகிவிட்டது. ஒரு நாள் அவனிடம் கேட்டாள் "எதுக்கு ரப்பர் பால்வெட்டுண்ணு சொல்றீங்க... ரப்பர் பால யாரும் வெட்டுறதில்லையே.... ரப்பர் மரப் பட்டையைத் தானே வெட்டுறீங்க...?" அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். பின்பு சொன்னான்.... "உங்க தூய தமிழ்ல அதுக்குப் பேரு ரப்பர் பால்வடிப்பு.. "உங்க தமிழ புரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல..." அவள் சொன்னாள். அவன் ஹக்...ஹக். ஹ.. என உரக்கச் சிரித்தான். இரவு பக்கத்தில் வந்து கொண்டிருந்தது.

இரண்டு மூன்று நாள்களாக நல்ல மழை. செபாஸ்டின் பால்வெட்டச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த போதுதான் "ஒரு அபிப்பிராயம் செல்லட்டா" என்றான் கமலாவதியிடம்

"என்ன சொல்லுங்க..,"

"எத்தனை நாளைக்குத் தான் இப்படி சம்பளத்திற்கு பால் வெட்டிட்டு இருக்கியது. அதுவும் மழையான பால்வெட்டு இல்ல... சம்பளம் இல்ல... நமக்கும் ரெண்டு கொமரு இருக்கு, அதுக்கு ஏதெங்கிலும் சேத்து வைக்கணும்..... ஒவ்வொருத்தனும் ரப்பர் மரங்களை கொல வெட்டுக்கு எடுத்து நல்லா பணம் சம்பாதிச்சிட்டு இருக்கானுவ... ஒண்ணுயில்லாம கிடந்த கிழக்குவிளை குமரசேன் பய கூட எங்கெங்கெயோ கொல வெட்டுக்கு மரங்களை எடுத்து... இப்பபாரு... கையில் 5 பவுன் பிரேஸ்லெட் என்ன... சுமோ காரு என்ன.... பெஞ்சாதிக்க கழுத்தில வடம் போல தாலிச்சரடு என்ன... வெலசயில்லியா செய்யுதான்... நமக்கு அது போலயில்லையெங்கிலும் கொறச்சு ரப்பர் மரங்கள கொல வெட்டுக்கு எடுத்து.... செறுதாட்டெங்கிலும் காசு பாக்கணும்...." என்றான்.

"அதுவும் சரிதான்..." என்றாள் அவள்.

சங்கரன்விளை தாமஸின் இருநூறு ரப்பர் மரங்கள் கொலைவெட்டிற்கு வந்தன. அவன் வீட்டுற்கு பக்கம் தான் அந்த மரங்களும் நின்றிருந்தன. செபாஸ்டினும், கமலாவதியும் சென்று மரங்களைக் பார்த்தனர். நல்ல பருமனும், உயரமும் கொண்ட மரங்கள். 2 வருடம் கொலை வெட்டு செய்து பால் வடித்துவிட்டு மரங்களையும் வெட்டி விற்று விட்டு நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.
தாமஸ் புதுப்பணக்காரன், ஐம்பத்தைத் தொட்ட வயது. மூக்கின் நுனியிலில் கோபம் நிரந்தரமாய் ஒட்டியிருக்கும் அவனிடம் வியாபாரம் பேசுவது அத்தனை எளிதல்ல. கடும் சொற்கள் சாதாரணமாய் விழும்.

செபாஸ்டின், கமலாவதியை அழைத்துக் கொண்டு மரங்களை விலை பேசப் போனான் அவனிடம்.
"என்ன விலையாக்கும் அண்ணன் எதிர்பாக்குது... ? " செபாஸ்டின் தாமஸிடம் கேட்டான்.
"6 லட்சம் ரூபாய் வேணும்...." தாமஸ் விலை சொன்னான்.
"அது கூடுதலாக்கும்..." செபாஸ்டின்
"லே... இதுக்கு மேலயும் வெலக்கி போகும்.. வேணுமிண்ணா எடு" தாமஸ் குரலை உயர்த்தினான்.
"நம்ம கிட்ட அவ்வளவு பணம் இருக்கா..." கமலாவதி செபாஸ்டினின் காதில் கிசுகிசுத்தாள்.
"ஆலோசிக்கண்டாம்... 600 இனம் ரப்பர் மரங்களாக்கும்... எருமை போல பால் குடுக்கும்... தடியும் நல்ல வெலபோகும்.. ஒருவாடு பேரு போட்டி போட்டி வெல கேட்டு வருனும்... எடுத்தா கொள்ளாம்....கொறஞ்சது 3 லட்சம் ரூபாயெங்கிலும் லாபம் கிட்டும்..." தாமஸ் சொன்ன போது செபாஸ்டினால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. அவனுக்குள் சந்தோஷம் கரைபுரைண்டது.
"சரி எடுக்கலாம்" என்றான் செபாஸ்டின்.

"அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வீங்க...?" செபாஸ்டினை சற்று தள்ளி அழைத்துச் சென்று கேட்டாள் கமலாவதி
"உருப்படி இருக்கில்லியா அடகு வைப்பம்." அவளது கழுத்தில் கிடந்த நகைகளைப் பார்த்தவாறு சொன்னான்.
"கொமருகளுக்கு உள்ளது இல்லியா...?" அவள் திருப்பிக் கேட்டாள்.
"எல்லாம் நல்லா நடக்கும்... தைரியமா செய்வோம்..."
"ம்..."
கமலாவதி சம்மதித்தாள்.

தாலிச் சங்கிலியும், இதர நகைகளும் தத்தூட் பைனாஸ்சிற்கு அடகு போயின.

ரங்கள் கைமாறி விட்டன. ஒன்று போல் சீராய் வளர்ந்து நிற்கும் 200 ரப்பர் மரங்கள். ஏறக்குறைய 15 வருடங்கள் பால்கொடுத்த மரங்கள், இரண்டாவது முறையாக பட்டைகள் தடித்து வளர்ந்திருக்கின்றது. பல மரங்களில் ஏற்கனவே ஏற்பட்ட காயங்கள் ஆங்காங்கே முளைத்து கட்டிபோல திரண்டிருந்தன. இத்தனை வருடங்களும் சீராக முறையாக கத்தியின் கூரிய முனைகளைத் தாங்கிய மரங்கள். இனி சீரில்லாமல் நெறியற்று.... தாறுமாறாக... கண்டமேனிக்கு கத்தியின் கூரிய முனைகளை உடலில் ஏற்கப் போகின்றன. கத்தியால் குத்திக் கிழித்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு பால் கொடுக்கின்றன. காயங்கள் அவைகளுக்கு புதிதில்லை. ஒரு வகையில் மனிதர்கள் தங்கள் பாத்திரங்களை இந்த மரங்களில் கட்டி வைத்துவிட்டு அவற்றிடம் பிச்சை கேட்கிறார்களோ என்னமோ...! என்ன மனிதர்கள் இவர்கள்! ஒருவன் உழைப்பை முழுமையாக சுரண்டி விட்டு அவனுக்கு சக்தி இல்லையெனும் போது துரத்திவிடுவது போலத்தான்... ரப்பர் மரங்களையும் கடைசியில் குத்திக் கிழித்து காயப்படுத்தி அழவைத்து.. கொன்று விடுகிறார்கள் ! எப்படி பார்த்துப் பார்த்து தண்ணீர் ஊற்றி, உரமிட்டு வளர்க்கப்பட்ட மரங்கள் இவை.... இப்போது ஈவு இரக்கம் இல்லாமல் அதன் மீது கொலை வெறி தாக்குதல். ஆனால் அதுதான் இங்கு உண்மை.. யதார்த்தம்... அதில்தான் பலருக்கு வாழ்க்கை.. வாழ்வு எல்லாம்.

சொபஸ்டின் "இயேசப்பா..." என்று வானத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து விட்டு அந்த நீண்ட பால்வெட்டுக் கத்தியால் ஒரு ரப்பர் மரத்தில் சிலுவை அடையாளம் வரைந்தான். பின் தனக்கு எட்டும் உயரம் வரை மரத்தில் கத்தியைப் பாயவிட்டான். வெள்ளை நிற திரவமாய் ரப்பர் பால் பீறிட்டுக் கொண்டு வந்தது. தாறுமாறாக அங்குமிங்குமாய் பாய்ந்து வந்த பாலை அவன் விரல்களால் நேர்படுத்தி மரத்தில் கட்டியிருந்த சிரட்டை நோக்கி திரும்பி விட்டான். தங்களின் வாழ்வை செழிப்பாக்கப் போகும் அந்த வெள்ளை நிற திரவம் சொட்டுச் சொட்டாய் சிரட்டையில் தேங்குவதைக் கண்ட கமலாவதி பரவசமானாள். தொடர்ந்து அவன் ஒவ்வொரு மரங்களிலும் கத்தியைப் பாயவிட்டான். அவள் தான் ஒவ்வொரு மரங்களாய்ச் சென்று சிரட்டையில் தேங்கிய பாலை சேகரித்தாள். குறுகிய நாள்களிலேயே வேகமாகப் பால் சேகரிக்கப் பழகிவிட்டாள். ரப்பர் தோட்டங்களினுள் குறுகிய தூரத்தில், குறுகிய நேரத்தில் ஒவ்வொரு மரங்களாகச் சென்றுப் பால்வெட்டுவதும், பால் சேகரிப்பதும் ஒரு கலை. அது தேனீக்கள் மலர்களுக்குச் சென்று தேன் எடுத்துவிட்டு கூட்டுக்கு திரும்பும் கலை போன்றது. கமலாவதிக்கு அது அத்துப்படியாகிவிட்டது. முந்தின நாள் பால் சேகரித்தபிறகு சிரட்டைகளில் படிந்திருக்கும் ஒட்டுப்பாலை எடுக்கும் போது விசையாய் கையில் அடித்து விடும். வலியைத் தாங்கிக் கொள்வாள். மழை நாளில் சிரட்டைகளில் தண்ணீரோடு இட்லி போல மிதந்து கிடக்கும் ஒட்டுப்பாலை எடுப்பது படுஅவஸ்தை. உடலில் தண்ணீர் சிந்திவிடாமல் எடுக்க வேண்டும். அழுகிய மாமிசத்தின் நாற்றம் அடிக்கும். இதற்கிடையே மிருகங்கள் போல் வந்து தாக்கும் கொசுக்கள். கமலாவதி தயங்கமாட்டாள். சேலையை தூக்கி இடுப்பில் சொருகி விட்டு வேகமாக செயல்படுவாள். அவள் தான் ரப்பர் பாலை பதப்படுத்தி ஷீட்டாக மாற்றுவாள்... போட்ட முதல் சிறிது சிறிதாக கையில் வந்து கொண்டிருந்தது. சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு.

ஏறக்குறைய ஒரு ஆண்டு கடந்து கடந்து விட்ட நிலையில் தான் நெஞ்சுக்குழியில் ஆசிட் கொட்டியது போன்று அந்த துயரம்... சூறாவளிக் காற்றில் மரங்கள் சாய்வது போல் ரப்பருக்கு விலை வீழ்ச்சி... நாளுக்கு நாள்... படிப்படியாக ரப்பர் விலை குறைந்தது. கிலோவிற்கு இருநூறு ரூபாய்க்கு விற்ற ரப்பர் ஷீட், 100 ரூபாய்க்கும் கீழே வந்தது. செபாஸ்டினுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கமலாவதி கலங்கித் தவித்து நின்றாள். கேரளாகாரனின் தத்தூட் பைனாஸ்சிற்கு அடகு போன நகைகளும், வீட்டில் இருக்கும் இரண்டு திருமண வயதையெட்டிய மகள்களையும் நினைத்து கண்ணீர் பெருகியது அவளுக்கு. இதனிடையே மரங்களில் இருந்து பால்வடிவது கடுமையாக் குறைந்து விட்டது. ரப்பர் ஷீட் விற்கும் விலையில் பால்வெட்டாமலே இருந்து விடலாம் போலிருந்தது செபாஸ்டினுக்கு. மரங்களின் பக்கமே செல்ல அவனுக்கு மனமில்லை. கமலாவதிதான் அவனை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள். அவளும் அவனுக்கு ஒத்தாசையாக அந்த நீண்ட கத்தியை வைத்து தனக்கு எட்டும் உயரத்தில் மரங்களைக் குத்திக் கிழித்தாள்... அவள் உடல் வலித்தது. தளர்ந்துப் போனாள். தங்களுக்காகத் தான் அந்த மரங்கள் கண்ணீர் வடிக்கின்றன என்று நினைத்துக் கொண்டாள்.

இன்னும் ஒரு மாதம் தான் மீதி இருக்கிறது. அதற்குள் மரங்களை வெட்டி விற்று விட்டு நிலத்தை ஒப்படைத்து விட வேண்டும். ரப்பர் ஷீட் விலையும், ரப்பர் தடிகளின் விலையும் தரை தட்டி விட்டது. தரகன்கன் வந்து அடிமாட்டு விலைக்கு ரப்பர் மரங்களை கேட்கின்றனர். எப்படியும் போட்ட முதல்ல 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் வரும். ரப்பர் விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தாத அரசை சபிப்பதா...? தங்களுக்கு மரங்களைத் தந்திருந்த தாமஸை குற்றம் சொல்வதா...? தங்கள் ஆசையில் தான் மண் விழுந்து விட்டதா...? கையில் இருந்த பணத்தையும், நகைகளையும் வச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம்... வலி... ஏமாற்றம்... தோல்வி... புலம்பினாள் கமலாவதி. .

ன்னும் முழுமையாக விடியவில்லை. செபாஸ்டின் விழித்த நிலையிலேயே கட்டிலில் படுத்துக் கிடந்தான். கமலாவதி எழும்பி முகம் கழுவி விட்டு வீட்டை விட்டு கிளம்பி நடக்கத் தொடங்கினாள். இருள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருந்தது. அவள் சிஎஸ்ஐ கோயிலைக் கடந்திருந்த நிலையில் பின்னால் உரசுவது போல் வந்து நின்றது அந்த எம் 80 (எம் எயிட்டி) பைக் . திருப்பிப் பார்த்தாள். கணவன் தான்.
"எங்கப் போறயிண்ணு தெரியும்... சங்கரன்விளை தாமஸ் வீட்டுக்குத் தானே.. ஏறு வண்டியில... சேர்ந்து போவோம்..."

அவள் பின்இருக்கை இல்லாத அந்த எம் 80 யின் பின்னால் அமர்ந்து கொண்டாள்.

அரசமூடு கோம்பையின் டீ கடையில் நல்ல கூட்டம். பால்வெட்டுத் தொழிலாளர்கள், ரப்பர் மரம் முறிக்கும் தொழிலாளர்கள் தான் அத்தனை பேரும். இடம் வலமாக கைகளை உயரமாகத் தூக்கி டீயை ஆற்றிக் கொண்டிருந்தார் கோம்பை. துணைக்கு நின்ற பையன் அவன் அடித்து வைத்த டீ க்களையும், அருகில் தட்டில் இருந்த உண்ணியப்பங்களையும் கடை முன்பு திரண்டு நின்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
செபாஸ்டின் எம் 80 ஐ கடை முன்பு நிறுத்தினான்.
"எறங்கு ஒரு சாயை குடிச்சிட்டு போவம்..."
"இல்ல.. வேண்டாம்..."
"எறங்கு... கொஞ்சம் தெம்பா இருக்கும்..."
அவள் இறங்கினாள்.
"ரெண்டு சாயை ஒன்ணு கடுப்பம் குறைச்சி" என்று சொல்விட்டு
தட்டில் இருந்த இரண்டு உண்ணியப்பங்களை எடுத்து அதில் ஒன்றை கமலாவதியின் கையில் கொடுத்தான்.
பாளையங்கோட்டைப் பழத்தை, மைதா மாவில் பிசைந்து செய்திருந்த உண்ணியப்பம் நல்ல சுவையாக இருந்தது. ஆனால் அதை ரசித்து தின்னும் மனநிலையில் கமலாவதி இல்லை.
"எங்கோட்டாக்கும் காலத்த ரெண்டு பேரும்...?"
டீ கடை கோம்பை கேட்டார்.
"சங்கரன் விளை தாமசுக்க வீட்டுக்கு.... கொறச்சி ரப்பர் மரம் கொலவெட்டுக்கு எடுத்ததுல ஒருவாடு நஷ்டம்... கொறசெங்கிலும் ரூபாயா திருப்பிக் கேக்குலாமிண்ணுதான்...."
அப்போது டீ கப்பை வாயில் வைத்து உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த தெங்குவிளைக்காரன் "க்ளக்" என்று சிரித்ததில் அவன் நாசியில் டீ ஏறிவிட்டது.
"என்னதுக்கு சிரிக்கிறீரு... ?" செபாஸ்டின் அவனிடம் கேட்டான்.
"பணத்தை திருப்பித்தாறது நடக்கிய காரியமா ஓய்... அதுவும் அந்த ஆளு நல்ல மொவன்.. பணத்தை தந்து உங்கள வீடு வரை கொண்டும் விடுவான்.. அவனும் மேற்குவிளை செல்லப்பனுக்கிட்டயிருந்து கொலவெட்டுக்கு மரம் எடுத்ததில நஷ்டப்பட்டு இருப்பாக்கும் என்றில்லியா பேச்சு அடிபடுது.... நீரு அறியாததா..." அவன் வேஷ்டியின் முனையால் முகத்தைத் துடைத்தவாறு சொன்னான்.
"தந்தா...தரட்டும்..." கமலாவதி தான் அவனுக்குப் பதில் சொன்னாள்.
செபாஸ்டின் டீயும், உண்ணியப்பத்திற்குமான காசை கடையில் நின்ற பையனிடம் கொடுத்தான்.

எம் 80 மீண்டும் புகையைக் கக்கிவிட்டு புறப்பட்டது.

மேற்குவிளை செல்லப்பனின் வீட்டின் அருகில் வண்டி சென்ற போது சத்தமிண்ணா அப்படி ஒரு சத்தம். நாய்கள் பெரும் குரலில் குரைத்துக் கொண்டிருந்தன. சங்கரன்விளை தாமஸின் கார் அந்த வீட்டின் கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்தது. கேட் திறந்து கிடந்தது. எம் 80 ஐ நிறுத்திய செபாஸ்டின், "தாமஸ் இங்க தான் வந்திருப்பாரு" என்று கமலாவதியிடம் கூறியவாறு உள்ளே நுழைந்தான். உள்ளே, அவன் கண்ட காட்சி, அவனை திகிலடையச் செய்தது.
வீட்டு முற்றத்தில் தாமஸூம், செல்லப்பனும் ஒருத்தருக்கொருத்தர் கைகலப்பு செய்து கொண்டிருந்தனர். கூடவே கெட்டவார்த்தைகள்.... ஒரு கட்டத்தில் இருவரும் தரையில் விழுந்து கட்டிப் புரண்டனர். செல்லப்பனின் மனைவியும், மகள்களும்... உச்சக் கட்ட குரலில் அலறிக் கொண்டிருந்தனர். திடீரென்று தாமஸின் பிடியில் இருந்த விடுபட்ட செல்லப்பன் வீட்டுக்குள் ஓடிச் சென்று வெட்டுக் கத்தியை எடுத்து வந்து தாமசை ஆவேசமாக வெட்ட முற்பட்டார். அதிலிருந்து தப்பிய தாமஸ் அந்த வீட்டைச் சுற்றி தலை தெறிக்க ஓடி... அங்கு கிடந்த செடித் தொட்டியில் கால் இடறி விழுந்தான். ஆத்திரம் அடங்காத செல்லப்பன் அவன் கழுத்துக்கு நேராக கொலை வெட்டாக கத்தியை ஓங்கினார். அதற்குள் பின்னாலிருந்து ஓடி வந்த செபாஸ்டின் கத்தியை பலம் கொண்டு பறித்து தூரத்தில் வீசினான்.

தாமஸ் திமிறிக் கொண்டு எழும்பினான்.

"வெட்டுக் குத்து நடத்த வேண்டிய பிராயமா ரெண்டு பேருக்கும்... தள்ளியிட்டு போங்க.... ஓய்..." என்று சொல்லியவாறு இருவரையும் பிரித்து விட்டான் செபாஸ்டின்.

செல்லப்பனை அவனது மனைவியும் மகள்களும் பிடித்து வீடு நோக்கி இழுத்தனர்.
"கொலைவெட்டிற்கு மரம் எடுத்ததில நஷ்டமிண்ணா இப்படி வந்து மெரட்டி தகராறு செய்து தள்ளக்கி விளிச்சா... பணத்தை குடுத்துரணுமா... அவனுக்கு மட்டும்தானா.. எல்லாருக்கும் தான் யாவாரத்துல நஷ்டம்..." என்றவாறு அவர் வீட்டிற்குள் சென்று கதவைத் படாரென சாத்தினார்.
கழன்று போயிருந்த வேஷ்டியை எடுத்து உடுத்திக் கொண்டிருந்த தாமஸை, செபாஸ்டின் கைத் தாங்கலாக பிடித்து அவன் காரில் ஏற்றினான்.


"நீ... வெட்டோத்தியை பறிச்சு எறியெல்லெங்கி வெட்டிப் போடப்பாத்தான் இல்லியாடே...." தாமஸின் குரல் உடைந்திருந்தது.
"கொலவெட்டாக்கும்...." செபாஸ்டின் தலையை ஆட்டியவாறு பதில் சொன்னான்.
கார் வெதுவாய் கிளம்பிப் போனது. செபாஸ்டின் எம் 80 ஐ இயக்கினான்... கமலாவதி பின்னால் ஏறிக் கொண்டாள்.

காலை 10 மணியிருக்கும், செபாஸ்டினின் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. தாமசும், அவன் மனைவியும் அதிலிருந்து இறங்கி நேராக வீடு நோக்கி வந்தனர். செபாஸ்டினும் கமலாவதியும் என்ன ஏதோ என்று விழித்தவாறு நின்று கொண்டிருக்கையில் எடுத்து வந்திருந்த பணப்பொதியை கமலாவதியிடம் கையில் கொடுத்தான்  தாமஸ். "இதில 5 லட்ச ரூபாய் இருக்கு.... எனக்கிட்டயிருந்து கொலவெட்டிற்கு மரம் எடுத்ததில வரக்கூடிய நஷ்டத்தை எடுத்துகிட்டு மீதியக் குடுங்க..." என்றான்.

கமலாவதி பேச்சற்று நின்றாள்.