செவ்வாய், 6 டிசம்பர், 2011




மு. சுந்தரம் - ஆசிரியருக்கான இலக்கணம்


ஆசிரியர் மு. சுந்தரம் அவர்களைப் பார்த்து வியக்கின்றேன். பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் உண்டுறைவிட மேல் நிலைப் பள்ளியில் வேதியல் ஆசிரியர் மு. சுந்தரம். திருநெல்வேலிக்காரர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சிப்பாறை பள்ளியில் ஆசிரியராக தொடர்கிறார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக அவரை நான் பார்க்கின்றேன். மாணவர் நலன், பள்ளிக்கூட நலன், பிறரோடு நல்லுறவு, ஆழ்ந்த படிப்பு, அறிவு நுட்பம், பேச்சாற்றல், தகவல் பரிமாற்றம், தியாகம், அர்ப்பணிப்பு என்பன போன்ற ஆளுமைகளின் மொத்த உருவம் தான் ஆசிரியர் சுந்தரம்.
பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளது அவரது சிறப்பு. ஆசிரியர் சுந்தரத்தின் பணியைப் பாராட்டி குமரி அறிவியல் பேரவை ஆசிரியர் திலகம் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
குமரி மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து மாணவர்கள் நலனுக்காக, அவர்களின் உயர்கல்விக்காக அவர் ஆற்றும் பணிகள் அளப்பரியது. 2011 டிச. 6 ல் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை ஆசிரியர் மு. சுந்தரத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆசிரியர் சுந்தரம் அவர்களை வணங்குகிறேன்.

வியாழன், 1 டிசம்பர், 2011

பேராசிரியர் தியாகசுவாமி


பேராசிரியர் தியாகசுவாமி ஒரு பல்கலைக் கழகம்


பேராசிரியர் தியாகசுவாமி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் 36 ஆண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிவர். தனது வாழ் நாளில் பெரும் பகுதியை கல்விப் பணிக்காகவும், இளைஞர் மேம்பாட்டு நலனுக்காவும் செலவிட்டவர். நடமாடும் பல்கலைக் கழகம் என்ற அறியப்பட்ட இவர், தனது வருவாயில் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தினார். தனது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை அமைத்ததுடன், பத்திரிகைகளில் வரும் செய்திகளை தனித்தனி தலைப்புகளாகப் பிரித்து அவற்றையும் தொகுத்து வைத்திருந்தார்.
மார்த்தாண்டம் இலக்கியப் பேரவை அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்தார். குமரி அறிவியல் பேரவை, போதை தடுப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்பட்டதுடன் ஏராளமான இளையோர் மன்றங்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுவந்தார். தனது கல்லூரி பேராசிரியர் பணி நாள்களில் விடுப்பு எடுக்காமல் மாணவர் படிப்பு நலனைக் காத்தவர்.
இவரது பணிகளைப் பாராட்டி குமரி தமிழ் எழுத்தாளர் இலக்கியப் பட்டறை தமிழ்ச் சுடர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இதே அமைப்பு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு தமிழ் சிற்பியின் பயணம் என்ற நூல் மூலமாக பதிவு செய்துள்ளது. குமரி மாவட்ட போதை தடுப்பு இயக்க அமைப்பாளர் வேலையன், இவரது பேச்சுக்களையும், சிறுகதைகளையும் தொகுத்து சிந்தனை முழக்கம் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் பதிவுத் திருமணம் என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரு பேராசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்துடன், சமூக அக்கறையுடன் எளிமையான வாழ்க்கை நடத்திய இவர், 27 நவம்பர் 2011 ல் இயற்கை எய்தினார். அவர் நம் மத்தியில் நடமாடிய பல்கலைக் கழகம். அவரது மறைவு குமரி மாவட்ட தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித நேயச் செயல்பாட்டாளர்களுக்கும் பெரும் இழப்பு.