சனி, 26 நவம்பர், 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம்





தம்பி வெட்டோத்தி சுந்தரம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். .
படம் தொடங்குவதற்கு முன், இயக்குனர் வி.சி. வடிவுடையான் திரையில் தோன்றி, குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் ஆனால் இந்த மாவட்டம் தான் அக்யூட்ஸ்டுகளும் நிறைந்த மாவட்டம் என்ற குற்றப் பத்திரிகையை வாசிக்கிறார். அதற்கேற்றாற்போல் படத்தின் கதையும் அமைந்துள்ளது.

அரபிக் கடலின் காலடியில் கிடக்கும் கிராமம் பொழியூர். அங்கு
ஆசிரியர் வேலைக்கான படிப்பு படித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்யும் கதாநாயகன் கரண், அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. அதற்கு அடுத்தப்படியாக போலீஸ் தேர்வுக்கு செல்கிறான். அதுவும் கிடைக்கவில்லை. உள்ளூர் அரிசி கடத்தும் கும்பலைச் சேர்ந்த சித்தப்பு சரவணனுடன் நட்பு ஏற்படுகிறது. அவன் கடத்தல் தொழிலுக்கு அழைக்கிறான். கதாநாயகன் மறுக்கிறான். இதற்கிடையில் உள்ளூர் பஸ்சில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுப்பதற்காக எடுத்த ஒரு ரூபாய் நாயணம் நழுவி அதே பஸ்சில் அமர்ந்திருக்கும் கதாநாயகியான கல்லூரி மாணவி அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் புகுந்துவிட, இருவருக்குள்ளும் காதலும் புகுந்துவிடுகிறது.

வேலை கிடைக்காத விரக்தியில் கரணின் நண்பன் தூக்குப்போட்டு தற்கொ லை செய்கிறான். ஒரு கட்டத்தில் சொந்த வீடு ஜப்தி போகும் நிலையில் அதனை மீட்க கடத்தல் தொழிலுக்கு தாவுகிறான் கதாநாயகன். அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம் காதல், கடத்தல், மோதல், மரணம் என விறுவிறு திருப்பங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளின் பிற்பகுதி அல்லது தொண்ணுறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு தொடர் நிகழ்வை திரைப்பதிவாகக் கொண்டுவந்த இயக்குனர் வி.சி. வடிவுடையானுக்கு பாராட்டுக்கள். இந்தப் படம் தான் முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தைக் கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் படமாக கருதுகிறேன். அலையடிக்கும் பொழியூர் கிராமம் தொடங்கி குமரி மாவட்டத்தில் பல இடங்களில் குறிப்பாக குலசேகரம் அருகே மங்கலம், தோவாளை, மார்த்தாண்டம், களியக்காவிளை என பல இடங்களில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் வி.சி. வடிவுடையான் தனது முதல் படத்திலேயே தொட்டிருக்கும் கதை மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை ஆகியவை மிகுந்த கவனம் பெறுகிறது. மட்டுமல்ல இது ஒரு ஒரு பட்ஜெட் படம் என்கின்றபோது தனக்குக் கிடைத்த வாய்ப்பை இயக்குனர் நிறைவாய் செய்திருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

எனினும் சில கருத்துகளை பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளில் இறுதிப் பகுதி முதல் தொண்ணுறுகளின் மையப்பகுதி வரை வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு மிகமுக்கியப் பிரச்னையாக இருந்தது. மட்டுமல்ல அகஸ்தீஸ்வரம் பகுதியில் வேர்விட்டு கிளைபரப்பிய கொலை வெறி ரவுடிகள், விளவங்கோடு பகுதியில் பன்றிமலை, செண்பகத்தரிசு, பொழியூர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் வடிப்பு என பல பிரச்சனைகளை, சவால்களை இந்த மாவட்டம் சந்தித்தது.

இதில் அலையடித்துக் கொண்டிருக்கும் பொழியூர் கிராமத்தில் சாராயம் வடிப்பது குடிசைத் தொழில். இதே காலகட்டத்தினை மையமாகக் கொண்டு தான் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகியோரின் காதல் காட்சிகளில் நேசமணி போக்குவரத்துக் கழக பஸ்சில் தொடங்குகிறது. ஆனால் அதே காலகட்டத்தை மையமாகக் கொள்ளமால் படம் தடுமாறுகிறது.

கதாநாயகன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் மங்கலம் பாலத்தின் அருகில் கட்டப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டு, தற்கொலை செய்யும் கரனின் நண்பர் அழுது புலம்பும் பஸ் ஸ்டாண்டில் வந்து செல்லும் தற்காலத்திய பஸ்கள், வில்லன் கோஸ்டியினர் சுமோ காரை வெடி குண்டால் தகர்த்து விட்டு மண் அள்ளிப்போட பயன்படுத்தும் பொக்ளின் இயந்திரம். இதற்கு மேலாக செல்போன்கள். என ஏராளம் காலத்தை மீறி நிற்பவை. கரனுக்கு, அஞ்சலிக்கும் இடையில் ரெமான்ஸ் கட்சிகளைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகளும், குமரி மண்ணில் அதிக இயற்கை வனப்பும் இருக்கையில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்யாமல் விடப்பட்டுள்ளது. குமரி வட்டார வழக்கிலுள்ள அதிகச் சொற்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால் பாத்திரங்கள், கரன் உள்பட பேசுவது இருவேறு வழக்கு மொழிகளாக தென்படுகிறது.

அரிசி மற்றும் சாராயம் கடத்துவதை மட்டும் காட்டும் இந்தப் படம் பொழியூர் பகுதியில் குடிசைத் தொழிலாக சாராயம் வடிப்பதையும், சாராயத்திற்காக கச்சாப் பொருள்களில் ஒன்றான கருப்புகட்டி வாங்கச் செல்லும் பெண்கள், தங்கள் தாலிச் சங்கிலிகள் உள்பட பொட்டு தங்க நகைகளை கருப்புக்கட்டி வியாபாரிகளின் அடகு வைத்து கருப்புக் கட்டி பெற்றுச் செல்லும் உண்மை நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கலாம்.

எனினும் விறுவிறுப்புடன் உண்மைச் சம்பவம் தொடர்புடைய ஒரு திரைப்படத்தை கொடுத்த வி.சி. வடிவுடையானுக்கும், நேர்த்தியாக நடித்த கதாநாயகன் கரன், நாயகி அஞ்சலி், வில்லன் சிலுவை, சித்தப்பு சரவணன், கஞ்சா கருப்பு ஆகியோரைப் பாராட்டுக்குரியவர்கள். இதில் வில்லன் சிலுவையின் நடப்பு தான் என்னை அதிகம் கவர்ந்தது.

இறுதியாக குமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் அதிகம், இங்கு தான் அக்யூஸ்டுகளும் அதிகம் என்று கூறும் இயக்குனர் வடிவுடையானின் கருத்தில் முரண்படுகிறேன். குமரி மாவட்டத்தில் வரதட்சிணை குற்றங்கள், தற்கொலைகள் அதிகமே தவிர வடிவுடையான் சொல்லும் அர்த்தம் கொண்ட வன்முறை சார்ந்த குற்றங்கள் குறைவு.