வியாழன், 8 செப்டம்பர், 2011

மௌனம்

ஒரு மௌனத்தைச்
சொல்லிவிட்டுப் போய்விட்டாய்...

அப்போது
உன் உதட்டுப் பள்ளத்தாக்கில்
விழுந்த நான்
இன்னும் எழுந்திருக்கவில்லை..

குளிரும் ராத்திரிகளில்
ஒரு உஷ்ணப் பெருமூச்சு..
நான்
கம்பளியாய்க் கொள்வேனே..

வெப்பம் தகிக்கும்
வெயில் ராத்திரிகளில்
ஒரு இதழசைவு...
நான் தென்றலாய்க் கொள்வேனே...

எதுவுமில்லை
மௌனத்தைத் தவிர
எதுவுமில்லை...

ஒரு நத்தைக் குஞ்சு
இழுத்துச் செல்லும்
ரயில் வண்டி ராத்திரிகளில்
வாய் முளைத்த பகல் மௌனங்கள்
என்னருகே வருகின்றன...

பாதம்.. கணுக்கால்... கொலுசு - என
அவைகள்-உன்
அவையங்கள் குறித்து
நலம் விசாரிக்கின்றன...

என்ன செய்வது
பதில் சொல்வதற்குள்
ஒவ்வொரு நாளும்
கிழக்கு பூத்துவிடுகிறது...

நான் மட்டும்
வற்றிய மார்பு சப்பும்
பசித்த பச்சிளமாய்
உன் நினைவுகளோடு...

வியாழன், 1 செப்டம்பர், 2011

கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் ஆண்டு விழா


கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப்பின் 6 வது ஆண்டு விழா நாகர்கோவிலில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பத்திரிகை செய்தியாளர்கள், வார இதழ் செய்தியாளர், தொலைக் காட்சி செய்தியாளர்கள் மற்றும் புகைப் பட கலைஞர்களைக் கொண்ட அமைப்பு கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் PRESS CLUB OF KANYAKUMARI DISTRICT.
செய்தியாளர்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் பணியாற்றும் பகுதி நேரச் செய்தியாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு மலர் ஒன்றை வெளியிட்டு ஆண்டு விழாவை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 6 வது ஆண்டு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி அரங்கில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தா. டென்சன் தலைமை வகித்தார்.
பொருளர் ஜே.எம். பெகின், ஆண்டு விழா மலர்க்குழு அமைப்பாளர் ஜே. லாசர், மலர் குழு உறுப்பினர்கள் குமுதம் செல்வராஜ், ஜி. முத்துக் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணைத் தலைவர் என். கமலன் அனைவரையும் வரவேற்றார். கிளப் செயலர் ஜி.எஸ். ராமபத்ரன் அறிக்கை சமர்பித்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் குமரி மாவட்ட ஆட்சியர் சோ. மதுமதி ஆண்டு விழா மலரை வெளிட அதனை எழுத்தாளர் முனைவர் எஸ். ஸ்ரீகுமார் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மறைந்த கிளப் உறுப்பினர் எம்.சி. கோபகுமாரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டது, மட்டுமல்ல மூத்த உறுப்பினர் தினகரன் தாசையாவிற்கு ரூ. 10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட்டது.
வாழ்த்திப் பேசிய எழுத்தாளர் முனைவர் எஸ். ஸ்ரீகுமார், கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ஜான் ஜேக்கப், மாவட்ட பாசனத்தார் சபைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ ஆகியோர் தங்களது பேச்சில் பகுதி நேரச் செய்தியாளர்களின் ஆதங்கங்களைப் பதிவு செய்து கொண்டனர். குமரி மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு செய்தியாளர்களுக்கான சலுகைகளை பெற்று தர முயற்சிப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர்கள் புலவர் மு. அருளப்பன், ஜி.எஸ். ராமபத்ரன், என். கமலன், எஸ். நஜ்முதீன், ஐ. கிருஷ்ணராஜா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு மலருக்கான அட்டைப் படம் வரைந்த ஓவியர் வாமனன், ஆசிரியர் திலகம் எம். சுந்தரம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். செயற் குழு உறுப்பினர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
நிகழ்வில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.