சனி, 29 ஜனவரி, 2011

மாத்தூர் தொட்டிப் பாலம்





மாத்தூர் தொட்டிப்பாலம்

மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவின் அதிசயம், சுற்றுலாப் பயணிகளை தாலாட்டும் தொட்டில், அதன் மேல் பகுதியில் மெல்லியதாய் வீசும் காற்றுக்கிடையில் நின்று கொண்டு பச்சைப் பசேலென விரிந்து கிடைக்கும் இயற்கை வனப்புகளை ரசிப்பது அலாதியானது.
எத்தனை உயரம்... எத்தனை பிரம்மாண்டம்... ஆற்று வெள்ளத்திற்கு மத்தியில் இத்தனை உயரத்திற்கு அந்த வசதியில்லாத காலத்தில் எப்படி எழுப்பினார்கள் இந்த அதிசயத்தை என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆம். 1969 ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதி பாசனத்திற்கு சிற்றாறு அணையைக் கட்டி, அதற்கான கால்வாயை வெட்டும் போது இப்படி ஒரு இக்கட்டில் சிக்கி விட்டோமே என்று பொறியாளர்கள் எண்ணியிருக்கக் கூடும். அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாத்தூரில் குறுக்காக 100 அடி ஆழத்தில் பாய்ந்து செல்லும் பரளியாற்றைக் கடந்து எப்படி கொண்டு செல்வது ? உண்மையில் சவாலான பணி தான். சாதித்திருக்கிறார்கள் நமது பொறியாளர்கள்.
1240 அடி நீளம், 101 அடி உயரம், 29 தூண்கள் என பிரமாண்டமாய் நிற்கிறது தொட்டிப்பாலம். ஒரு பக்கம் கால்வாய், அதற்கு இணையாக மக்கள் நடந்து செல்ல நடைபாதை.
தமிழக சுற்றுலாத் துறையும், குமரி மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் பஞ்சாயத்துகளான அருவிக்கரை, வேர்க்கிளம்பி நிர்வாகங்களும் இங்கு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் பல வசதிகளை செய்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இப்பகுதியில் உற்பத்தியாகும் அன்னாசிப் பழங்களும், வருக்கை பலாப்பழங்களும் கிடைக்கும்.
வாருங்கள்.. இயற்கை இங்கு உங்களுக்காக தொட்டில் கட்டி காத்திருக்கின்றது. இது உங்கள் இதயத்தை கொள்ளைக் கொள்ளும் இடம்.
நாகர்கோவிலிலிருந்து தக்கலை அழகியமண்டபம் திருவட்டார் மாத்தூர் வழியாக இந்த பாலத்திற்கு செல்லாம். திருவட்டாரிலிருந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு 3 கி.மீட்டர் தூரம்.