திங்கள், 24 மே, 2010

லாசர் ஜோசப் கவிதை




ஆன்லைனில் ஆடுகள் வளர்க்கலாம்

ஏ... !
எதிர்காலச் சந்ததியினரே
எதை விட்டுச் செல்வோம்
உங்களுக்காக....

அதோ
பள்ளத்தாக்குகளில் குதித்து
பேச்சியிடம் கதை பேசிவரும்
கோதை நதியையா...

அகிலும், தேக்கும்
அழகிய
சந்தனங்களும் கொண்ட
அசம்பு வனத்தையா...

மழை மேகங்கள்
தழுவிச் செல்லும்
தாடகை மலையையா...

தண்ணீருக்கு மார்பு காட்டி
படுத்துக் கிடக்கும்
திற்பரப்பு பாறைகளையா...

கன்னியும், கும்பமுமாய்
இரண்டு போகம்
விளையும்
நாஞ்சில் வயல்களையா....

ஆடுகள்
குட்டிகளோடு
துள்ளி விளையாடும்
பசும் புல் வெளிகளையா...

எதை விட்டுச் செல்வோம்
சந்ததியினரே
உங்களுக்காக...?

துகிலுரியப்பட்ட
பூமியைத் தவிர
வேறென்ன இருக்கும்
விட்டுச் செல்வதற்கு...?


சபிக்காதாதீர்
சந்ததியினரே
எங்கள் வயிறு பெரிது
பசி பெரிது

எனினும் உங்களுக்கான
கணினிகளை சேமித்து
வைத்திருக்கிறோம்

நீங்களும் தான்
ஆன்லைனில்
ஆடுகள் வளர்க்கலாம்...