வெள்ளி, 29 ஏப்ரல், 2011

வெட்கப்பட வேண்டாம்..




இன்னும் பெரிய கோப்பைகளை
வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள்
பெருத்த வயிறுகளுக்கு
இதைவிட பெரிய கோப்பைகள் வேண்டுமென்று
நாம்
உணர்ந்துள்ளோம்.

செந்நிற திரவமோ
கருநிற திரவமோ
உங்கள் கோப்பைகளில்
எப்போதும்
நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கட்டும்.

நீங்கள்
இன்பம் என கருதுவதைத் தானே
நாம்
தரவேண்டும் ?

உங்களில் பலர்
வெட்கத்துடனும்
புன் முறுவலுடனும்
புட்டிகளுக்காக
வரிசையில் நிற்பதை
நாம்
கண்டு வருகிறோம்..

வெட்கப்பட வேண்டாம்
எனெனில்
நாமே
வெட்கப்படுவதில்லை...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சுற்றுச் சூழல்


தமிழகத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன ?


கன்னியாகுமரி மாவட்டம் களியல் சந்திப்பில் ஒரு சகோதரர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். ஆரம்ப கல்வி மட்டுமே கற்ற அவருக்கு, சுற்றுச் சூழல் குறித்து இருக்கும் கவலை, நம்மில் பலருக்கு இல்லை. அந்த சகோதரர் காங்கீரீட் கட்டுமானங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது குறித்து பல் வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கும் அரசுக்கும் தொடர் கடிதங்கள் எழுதி வருகிறார். ஆனால் அவரது கடிதங்களுக்கு எந்த நடவடிக்கைகளும் இல்லை.
இந்தியாவில் சுனாமிக்கு பிறகு சுற்றுச் சூழல் குறித்த அக்கறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அதனை முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் தற்போது அனைத்தையும் விற்று காசாக்குவது என்ற நோய் வேகமாக பரவிவருகின்றது. இதில் ரீயல் எஸ்டேட் தொடங்கி பாறைகள், குன்றுகள் என எல்லாவற்றையும் உடைத்து விற்று தங்கள் கஜானாவை நிரம்பி விட வேண்டுமென்று அரசியல் பிரமுகர்கள், அல்லது அவர்களது பினாமிகள் துடித்துக் கொண்டிருகின்றனர்.
இதில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுக்கும் வித்தியாசமில்லை.
இதன் ஒரு பகுதியாகத் தான் இயற்கை வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இயற்கை அரணாக திகழும் பாறைகள் மற்றும் குன்றுகளை உடைப்பதும், தினம் நூற்றுக்காணக்கான லாரிகள் மணல் மற்றும் பாறைத் துகள் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு செல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தை விட கேரளாவில் அதிக அளவு பாறைகளும், குன்றுகளும் உள்ள நிலையில் தமிழகத்திலுள்ள பாறைகளை உடைத்து கேரளாவிற்கு கொண்டு செல்ல என்ன அவசியம் வந்தது என்ற கேள்வி ஒவ்வொரு சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் மனதில் எழும்பும் நியாயமான கேள்வியாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைக் கிராமமான களியல் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த கல்குவாரி நிறுவனம் ஒன்று பாறைகளை உடைத்து அதன் துகளை தண்ணீரில் கழுவி எம்-சான்ட் என்று செயற்கை மணலாக மாற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கிறது. இதற்காக இங்குள்ள கோதையாற்றிலிருந்து தினம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்துத் வருகின்றது. இதற்காக விதிகளை மீறி மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. இதனை தடுக்க பொதுப்பணித் துறை முன்வரவில்லை. 50
டன் சுமையோடு மணல் அல்லது பாறைத் துகள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும், அதனால் பிற வாகனங்களில் பயணிப்போருக்கு நேர விரயமும், பிற வாகனங்களுக்கு கூடுதல் எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இது தவிர அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால் குமரி மாவட்டதில் தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் அழகான சாலை என்றால் அது ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையாகத் தான் இருக்கும். பரந்து விரிந்து கிடக்கும் சிற்றாறு அணையின் கரைப் பகுதி வழியாக இருபுறமும் பூத்துக் குலுங்கி நிற்கும் கொன்றை மரங்களுக்கு மத்தியில் செல்லும் சாலை இயற்கை பிரியர்களை, இறக்கை கட்டி பறக்க வைக்கும் அழகு கொண்டது. ஆனால் அந்த சாலை இப்போது கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறிய சாலை போல் காட்சியளிக்கின்றது.
இத்தகைய சேதங்களையும், இழப்புகளையும் கணக்கிட்டால் அரசுக்கு மணல், அல்லது பாறைத் துகள் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் கொசுறு தான். குத்தகை தாரர்களுக்கும் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் கொள்ளை லாபம்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் தமிகத்தில் பாறைகள், குன்றுகள் எதிர்காலத்தில் இருக்குமா... நமது சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுமா... அனைத்தையும் விற்று காசாக்குவது தொடருமா... தமிழத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்புவதற்கான அவசியம் என்ன.. கேள்விகள் ஏராளம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ரோபோக்கள் போதும்

தன்னைத் தானே
வெட்டிக் கொண்டு
செத்துப் போனான் பா.கி.

கணினியிலிருந்து வெளியேறிய
கனலில்
கருகிப் போனார்கள்
தினக் கவர்ச்சிப் பத்திரிகை
ஊழியர்கள்

நாளை
நட்டு வைத்திருந்த
சூலாயுதத்தில் விழுந்து
செத்துப் போகக் கூடும்
ராம சங்கரன்

நீதி மன்றங்களுக்கு
சாட்சி முக்கியம்
மனசாட்சி ?

இனி
தீர்ப்புகளை
ரோபோக்கள் சொல்லும்..