புதன், 26 அக்டோபர், 2011

மீறப்படும் பத்திரிகை தர்மம்

இப்போதெல்லாம் ஒரு சில தமிழ்ப் பத்திரிகைகளை எடுத்துப் பார்க்க நேர்ந்தால் அதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஜனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைகளில் இப்போதையை போக்கு, ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தில் குழிதோண்டும் செயலாகவே நினைக்கத் தோன்றுகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தமிழ் பத்திரிகைகள் சில அரங்கேற்றிய செயல்களைத் தான் வேதனையோடு எழுதுகிறேன்.

ஒரு பத்திரிகையில் ஒரு செய்தியை செய்திக்குரிய அமைப்போடு date line கொடுத்து வெளியிடுவதும், விளம்பரத்தை கட்டம் போட்டு அதன் கீழே advt என்று பதிவு செய்வதும், விளம்பரதாரர் கட்டுரையாக இருப்பின் advertorial என்று பதிவு செய்வதும் மரபு.
ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த மரபு முழுமையாக மீறப்பட்டு காற்றில் விடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களைக் குறித்த விளம்பரங்களை கட்டணம் பெற்றுக் கொண்டு, அல்லது 1000, 500 என ஒரு குறிப்பிடட அளவு பத்திரிகைகளை சம்மந்தப்பட்ட வேட்பாளர் வாங்க வேண்டுமென்ற நிபந்தனையோடு செய்தி போல் விளம்பரங்களை, பத்திரிகைகள் வெளியிட்டன.

சில பத்திரிகைகள் பேக்கேஜ் முறை என ஒரு குறிப்பிட்ட தொகையை வேட்பாளர்களிடம் பெற்றுக் கொண்டு அவர்கள் சார்ந்த செய்திகளை குறிப்பிட்ட நாள்கள் வெளியிட்டன. வாசகர்கள் இவை அனைத்தையும் செய்தி என்று கருதும் நிலை ஏற்பட்டது. பல வாசகர்கள் உண்மையான செய்தி எது, விளம்பரம் எது (அல்லது போலிச் செய்தி) என்று குழம்பிப்போனார்கள். paid news என்று கூறப்படும் இத்தகைய செய்திகள் வாசர்களை ஏமாற்றும் செயலாகும். மட்டுமல்லாமல் ஒரு நாளிதழ் தனது வாசகனையே ஏமாற்றும் நடவடிக்கையாகத் தான் சமூக நலம் கொண்ட பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்குமுன் வட இந்திய மாநிலங்களில் இதுபோன்ற செயல்களைப் பத்திரிகைகள் அரங்கேற்றியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் சென்று அவை விசாரணை நிலையிலுள்ளன.
தேர்தல் விதிகள் படி ஒரு வேட்பாளர் இத்தனை ரூபாய் தான் செலவளிக்க வேண்மென்ற நிலையில் paid news க்காக வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகை தேர்தல் கணக்கில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. இதனால் வேட்பாளர்களின் தேர்தல் விதி மீறல்களுக்கு பத்திரிகைகள் துணைபோகின்றன.
பத்திரிகைகளின் இத்தகைய செயல்பாடு வலுவான ஜனநாயகத்திற்கும், நல்லவர்கள் ஆட்சியில் வருவதற்கும் எதிரான செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து தலைப்புச் செய்திகள் வெளியிடும் இத்தகைய பத்திரிகைகள் தங்கள் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டாமா...? ஏற்கனவே ஒவ்வொரு செய்தியிலும் தனது மூக்கை நுழைத்து ஏதாவது ஒரு கமென்ட் அடித்து அதனை வெளியிடும் இத்தகைய பத்திரிகைகள். தற்போது காசேதான் கடவுளடா என்ற பாணிக்கு இறங்கியுள்ளது வேதனையிலும், வேதனை. வாசகர்கள்தான் விழிப்பாய் இருக்க வேண்டும்.