வியாழன், 9 டிசம்பர், 2010







மறுபடியும் மறக்க முடியாத நாள்...
டி
சம்பர் 7 ம் தேதி நண்பகல், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பலத்த மழையில் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
சன் டிவி ஜெரால்டிடமிருந்து போன் வந்தது. "லாசர், பேச்சிப்பாறையிலிருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தெறந்து விட்டிருக்காங்களாம்". எனது மனதிற்குள்ளும் அந்த எண்ணம் ஏற்பட்டிருந்தது. மழை மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் தினமலர் நண்பர் ஜெயமோகன் திருநந்திக்கரை கோயிலில் வெள்ளம் புகுந்து விட்டதாக போனில் சொன்னார். "உடனடியாக புறப்பட்டு வாருங்கள் இருவரும் அங்கு செல்லலாம்" என்றேன்.
சற்று நேரத்தில் அவரும் வந்துவிட்டார். இருவருமாக திருநந்திக்கரை விரைந்தோம்.
செல்லும் வழியில் திட்ட விளை கிராமம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தை பார்த்தபோது நிலமையை முழுமையாக உணர்ந்து கொண்டோம்.
ஏறக்குறைய இருள் சூழ்ந்து விட்டிருந்தது. நந்தியாறு நிரம்பி நந்தீஸ்வரர் கோயிலுக்குள் வெள்ளம் வேகமாக புகுந்து கொண்டிருந்தது. கோயில் வெள்ளத்தில் மிதந்தது போலவே காணப்பட்டது. அந்த நேரத்திலும் கோயிலில் அர்ச்சகர் பூசை நடத்திக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவரை வெளியே அழைத்து வந்தார்கள்.
பின்னர் ஒருவழியாக புகைப்பட காரரை அழைத்து படம் எடுத்தோம். பின்னர் அவசர அவரசமாக வீடு வந்து அடுத்த நாள் செய்திக்கு படத்துடன் அதனை கணினியின் தட்டிவிட்டேன்.
மழை தொடர்ந்து தீவிரமானது. சற்று நேரத்தில் பேச்சிப்பாறை அருகில் வசிக்கும் அண்ணன் சேவியர் வீட்டிலிருந்து போன் வந்தது. வெள்ளம் வீட்டின் முற்றம் வரை வந்து விட்டதாக சொன்னார். எனது மனக்கண் முன்னால் 1992 நவம்பர் 13 தான் ஓடிக்கொண்டிருந்தது. விமலாவிடமும் அதனை விவரிதேன். நண்பர்கள் ஜெயமோகன், கமலன், பிரதீஸ் ஆகியோரிடமிருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் ஜெரால்டிடமிருந்து அழைப்பு, கலெக்டர் ராஜேந்திர ரத்னூ திருவட்டாரில் முகாம் என்றார்.
இரவு தூக்கம் வரவில்லை. அதிகாலை 3 மணிக்கு நண்பர் மைக்கேல் ராஜிடமிருந்து அழைப்பு, லாசர் மழை நிற்கவில்லை. பலத்த இடி வெட்டும் உள்ளது என்றார்.
காலையில் எழுந்து முதல் வேலையாக மழைக் கோட்டை அணிந்து கொண்டு திற்பரப்பு அருவிக்கு விரைந்தேன். நிலைமையின் தீவிரம் மேலும் உறைத்தது. அப்புறம் களியல், பின் தொடர்ச்சியாக திருவட்டார், தேமானூர், மூவாற்றுமுகம், பின்னர் பேச்சிப்பாறை என கொட்டும் மழையில் ஒரே ஓட்டம் தான். எங்கும் வெள்ளத்தின் ருத்ர தாண்டவம். இடையில் மோட்டார் சைக்கிள் வேறு பல இடங்களில் மக்கர் செய்தது. ஒரு வழியாக சம்வங்களை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்து கணினி முன் அமர்ந்தேன்.....
றக்க முடியாத நாள்கள்... . ஆம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளது. 1992 நவம்பர் 13 க்கு பிறகு 2010 டிசம்பர் 7, 8 தேதிகளில்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மறுகால் வெள்ளமும், இதர பகுதிகளிலிருந்து புறப்பட்டு வந்த வெள்ளமும் ஆற்றில் பிரவாகம் எடுத்து ஓடியது.
உண்மையில் 1992 ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு இப்போது இல்லை. ஊடகங்கள் வழியாகவும், இதர தகவல் தொடர்பு கருவிகள் வழியாகவும் கிடைத்த தகவல்கள் மக்களை முன்னெச்சரிக்கையாக வைத்து விட்டன. எனினும் ஆறுகளின் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை இந்த வெள்ளம் பாதித்து விட்டது. அவர்களின் உடமைகளை வெள்ளம் களவாடி விட்டது. அது போல் நெல் வயல்களையும் மழை வெள்ளம் பதம் பார்தது விட்டது.
ஆற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்படும் போதும், தண்ணீர் பாய்ந்து செல்லும் தடங்கள் தடுக்கப்படும் போதும் அரசு அதிகாரிகள் வேடி்க்கை பார்ப்பதைத் தவிர வெறென்ன செய்வார்கள் ?.
மறுபடியும் வெள்ளம் நமக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.