திங்கள், 23 மே, 2011

மக்கள் புரட்சி

நடந்து முடிந்த தமிழகப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா.. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேலை நியமண தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு பல ஆயிரம் பேர் மீண்டும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னை நகர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வெளி நாட்டு உதவியுடன் பல்வேறு தொழிற்சாலைகள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம். 108 ஆம்புலன்ஸ் சேவை என எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அந்த அரசு செய்தது.
ஆனாலும் வீழ்ச்சி. ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போல இலவசங்களைக் கொடுத்து விட்டு இமாலய ஊழல்கள் செய்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர். சுனாமி போல் சுழன்றடித்த மின் வெட்டால் தமிழகம் இருண்ட போது உருப்படியாய் எதுவும் செய்வில்லை. குடும்ப உறுப்பினர்களின் கோரத் தாண்டவம், எல்லாத் துறையிலும் ஆதிக்கம் என மக்களுக்கு கொடுத்த இன்னல்கள், மக்கள் நலப்பணிகளை எல்லாம் விழுங்கி்க் கொண்டது. இடைத் தேர்தல்களில் வாக்காளர்களை விலைக்கு வாங்கி செயற்கையான வெற்றி பெற்று மக்களின் உண்மையான மனநிலைய நிலையை புறம் தள்ளினர். அல்லது கவனிக்க மறந்தனர்.
தமிழகத்தில் திராவிட இனத்தின் அரணாக ஒடுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்றும், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்த இயக்கம் ஒருகட்டத்தில் அதிலிருந்து சறுக்கியது பெரும் சோகம். திமுக ஜாதி அரசியலுக்குள் சிக்கியதும், திமுகவின் பெரும் தலைகள் ஜாதியத்தின் ஆதரவாளர்களாய் ஆதிக்க சக்திகள் போல் வலம் வந்ததும். திமுக தலைமையின் அங்கத்தினர்கள் பகுத்தறிவு சிந்தனைக்கு எதிரானப் போக்குகளைக் கொண்டதும், அந்த இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்ற கேள்வி நோக்கி மக்களை குறிப்பாக இன உணர்வாளர்களை சிந்திக்க வைத்தது. திமுகவின் மாறிய சிந்தனைப் போக்கு மக்களுக்கு இலவசமாய் எதையாவது வீசி அவர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு ஆடம்பரமாக அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமென்பதாகத் தான் இருந்தது.
ஆனால் மக்கள் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டு காத்திருந்தனர். மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம். நியாயமாக நடைபெற்ற ஓர் தேர்தலில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். யார் வந்தாலும் கவலையில்லை.. திமுக அல்லது திமுக கூட்டணி வரக்கூடாது என்ற முடிவை எழுதி விட்டனர்.
அதனால் தான் அதிமுக அரியணை ஏறிவிட்டது. அதிமுகவும் இந்த மக்கள் புரட்சியை மனதில் கொள்வது நல்லது.

வெள்ளி, 6 மே, 2011

வல்லரசு

அவர்களிடம்
அரிவாள் இருக்கின்றது
கத்தி இருக்கின்றது
கடப்பாரை இருக்கின்றது
ஏன்...
அணு குண்டுகள் கூட இருக்கின்றதாம்.

நெருங்க முடியாதாம்
வல்லரசாம்.

அங்கே
வறுமைப் பானைகளில் தான்
பட்டினியை சமைக்கின்றார்களாம்.

இரட்டைத் டம்ளர்களின் தான்
ஜாதிகளை ஆற வைக்கின்றார்களாம்.

பாப்பா பட்டிகள்
ஜனநாயகத்தின் உதாரணங்களாம்.

ரத்ததானம்
மனிதனுக்கும் மண்ணுக்கும் தானாம்.
அதற்கு
மதங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாம்.

அவர்களிடம்
அணு குண்டுகள் கூட
இருக்கின்றதாம்..

நெருங்க முடியாதாம்
வல்லரசாம்...