
கவிஞர் சந்திரகலா
சந்திரகலா நான் கொண்டாடும் கவிஞர். இலக்கியத்தில் இடம் பிடித்த அதங்கோடு அவர் பிறந்த மண். வாரமலர் இதழின் பின் பக்க அட்டைகளை அவரது கவிதைகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. என் வயதுக்கு சற்று்க குறைவாகத் தான் இருக்கும் அவரது வயது. கன்னியாகுமரி மாவட்டப் பிரஸ் கிளப் தான் முதலில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எனக்கு அளித்தது.
வசீகரிக்கும் வார்த்தைகளால் நேர்த்தியாய் கவிதை நெய்யும் வித்தை அவருகே உரியது. சந்திரகலாவின் பெயர் இல்லாமல் தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிஞர்களின் பட்டியலைத் தயாரித்து விட முடியாது. அவரது கவிதைகளைப் படிக்கும்போதல்லாம் பரவசம் அடைகிறேன்.
அந்தி வானம், அலைகடல், அழகான பெண்கள், சந்திரகலாவின் கவிதை......
1990 களில் வாரமலர் இதழில் வெளிவந்த சந்திரகலாவின் ஒரு கவிதையை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து அழகு பார்த்தேன். காலம் கடந்து நிற்கும் அந்தக் கவிதையை நீங்களும் படியுங்களேன்....
தலைமை நாற்காலி
மருமகளே
இது உன்
ராஜ சபை.
புகுந்த வீடு எப்படியோ
என்கிற
புதுக்குழப்பம் வேண்டாம்
தாய் வீட்டில் அனுபவித்த
சுதந்திரக் காற்றை
நீ
இங்கேயும் சுவாசிக்கலாம்.
நான் உனக்கு
மாமியாரல்ல
மாற்றாந்தாயல்ல
இன்னொரு தாய்
இரண்டாவது தாய்.
மகளே
நானும் ஒரு நாள்
மருமகளாக இருந்தவள் தான்
என்பதை
மறந்துவிடவில்லை.
பயப்படாதே
என் வீட்டு ஸ்டவுக்கு
எரியத் தெரியும்
எரிக்கத் தெரியாது.
என் மகனுக்கொரு
பூரணமான வாழ்க்கை மட்டும்
நோக்கமாக இருந்ததால் தான்
மயிலே- உன்னை
மருமகளாக்கி இருக்கிறேன்.
மூலைக்கு மூலை
நடப்பது போல்
வியாபார நோக்கத்தோடு அல்ல.
இனி என்
இருபத்தோரு வயது குழந்தையின்
நித்திரையும்
விழிப்பும்
நீ
சம்மந்தப்பட்டது.
மகளே
என் வீட்டுக் கவுரவம்
உன் இதயத்திலும்
என் வீட்டுச் சாவி
உன் இடுப்பிலும்
இருக்க வேண்டுமென்பது தான்
இந்த
அன்னையின் உள்ளத்தின்
ஆடம்பரமில்லாத ஆசை.
வா- மகளே
வந்து உட்கார்
இது-
இது வரை
நான் வகித்து வந்த
தலைமை நாற்காலி
இனி மேல்-
எனக்கு
இரு்க்கவே இரு்க்கிறது
சாய்வு நாற்காலி...
