மு. சுந்தரம் - ஆசிரியருக்கான இலக்கணம்
ஆசிரியர் மு. சுந்தரம் அவர்களைப் பார்த்து வியக்கின்றேன். பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் உண்டுறைவிட மேல் நிலைப் பள்ளியில் வேதியல் ஆசிரியர் மு. சுந்தரம். திருநெல்வேலிக்காரர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சிப்பாறை பள்ளியில் ஆசிரியராக தொடர்கிறார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக அவரை நான் பார்க்கின்றேன். மாணவர் நலன், பள்ளிக்கூட நலன், பிறரோடு நல்லுறவு, ஆழ்ந்த படிப்பு, அறிவு நுட்பம், பேச்சாற்றல், தகவல் பரிமாற்றம், தியாகம், அர்ப்பணிப்பு என்பன போன்ற ஆளுமைகளின் மொத்த உருவம் தான் ஆசிரியர் சுந்தரம்.
பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளது அவரது சிறப்பு. ஆசிரியர் சுந்தரத்தின் பணியைப் பாராட்டி குமரி அறிவியல் பேரவை ஆசிரியர் திலகம் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
குமரி மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து மாணவர்கள் நலனுக்காக, அவர்களின் உயர்கல்விக்காக அவர் ஆற்றும் பணிகள் அளப்பரியது. 2011 டிச. 6 ல் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை ஆசிரியர் மு. சுந்தரத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆசிரியர் சுந்தரம் அவர்களை வணங்குகிறேன்.
