சனி, 23 ஜனவரி, 2010

கவிதைகள்


காதலனுக்கு ஒரு நினைவூட்டல்

அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும் அழியாமல் இருக்கலாம்.

நினைவிருக்கிறதா ?
ஒரு- இலையுதிர் காலத்திற்குப் பின்
அந்தக் காடுகளில்
தங்க நிறத்தில்
தளிரிலைகள்
துளிர்க்கத் துவங்கியபோது
நம் காதலும் துளிர்த்தது.

தளிரிலைக் காம்புகளி்ல்
சுரக்கும் தேனாய்
நம் காதலும் கனிந்தது.

அது ஒரு மார்ச் மாதம்
அப்போது அந்த மரங்கள்
பூக்களை சுமக்கத் துவங்கியது.

பூக்களின் வாசமும்
நம் காதலும்
ஊருக்குள் வீசத் தொடங்கியது.

ஒரு ஜூன் மாதத்தில்
வெடித்துச் சிதறும்-அதன்
காய்கள் போல்
நாம்-கலகலவென
பேசி சிரித்து மகிழ்ந்திருந்தோம்.

திருமணம்-குறித்து
நான் பேசிய போதெல்லாம்
நீ- அந்த மரத்தின்
பிசின் போல்
நாள்களை
இழுத்துக் கொண்டே போனாய்...

அப்புறம்
ஓர் நாள்-அது
அறுந்து விட்டது.

அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும்......

(ஹிவியா பிரசீலியன்ஸ்-ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக