ஒரு மௌனத்தைச்
சொல்லிவிட்டுப் போய்விட்டாய்...
அப்போது
உன் உதட்டுப் பள்ளத்தாக்கில்
விழுந்த நான்
இன்னும் எழுந்திருக்கவில்லை..
குளிரும் ராத்திரிகளில்
ஒரு உஷ்ணப் பெருமூச்சு..
நான்
கம்பளியாய்க் கொள்வேனே..
வெப்பம் தகிக்கும்
வெயில் ராத்திரிகளில்
ஒரு இதழசைவு...
நான் தென்றலாய்க் கொள்வேனே...
எதுவுமில்லை
மௌனத்தைத் தவிர
எதுவுமில்லை...
ஒரு நத்தைக் குஞ்சு
இழுத்துச் செல்லும்
ரயில் வண்டி ராத்திரிகளில்
வாய் முளைத்த பகல் மௌனங்கள்
என்னருகே வருகின்றன...
பாதம்.. கணுக்கால்... கொலுசு - என
அவைகள்-உன்
அவையங்கள் குறித்து
நலம் விசாரிக்கின்றன...
என்ன செய்வது
பதில் சொல்வதற்குள்
ஒவ்வொரு நாளும்
கிழக்கு பூத்துவிடுகிறது...
நான் மட்டும்
வற்றிய மார்பு சப்பும்
பசித்த பச்சிளமாய்
உன் நினைவுகளோடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக